ஒரு திங்கட்கிழமை காலை வேளையில், ரயிலில் உச்சநேர கூட்டம் நிரம்பிவழிந்த நிலையிலும் ஒரு பெண்ணின் மீது ‘உரசி’ மானபங்கம் செய்தார் முகமது ரஷித் முகமது.
தொழில்நுட்ப உதவி அலுவலரான ரஷித் 31 வயது பெண்ணுக்கு மிக அருகில் நின்று தனது கால்சட்டையைக் கீழிறக்கி, அந்தரங்க உடல்பாகத்தை அந்தப் பெண்ணின் மீது உரசினார். சில வினாடிகளில் திரும்பிப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்ததுடன் உடனடியாக ரஷித்தை நோக்கி கத்தியதுடன் அவரை ஒரு புகைப்படம் எடுத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து டோபி காட் எம்ஆர்டி கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்தார் அந்தப் பெண். அதே நாள் ரஷித் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி காலை 8.17 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்த 55 வயது ஆடவருக்கு இன்று (ஜனவரி 21) ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் மீண்டும் இத்தகைய குற்றத்தைப் புரியமாட்டார் என்றும் ரஷித்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மானபங்கக் குற்றத்தைப் புரிவோருக்கு ஈராண்டுகள் வரை சிறை, அபரதம், பிரம்படி போன்றவை விதிக்கப்படலாம். ரஷித் 50 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவருக்கு பிரம்படி விதிக்க முடியாது.
#மானபங்கம் #ரயில் #உரசி #தமிழ்முரசு