பாம்பே ஜெயஸ்ரீ, சித் ஸ்ரீராம், கார்த்திக், சாஷா திருப்பதி, 14 வயது இசைத்திறன் லிடியன் நாதசுவரம் போன்ற பிரபல இசைக்கலைஞர்கள் இன்னும் சில நாட்களில் சிங்கப்பூரில் ஒரே மேடையில் சங்கமித்து இசை விருந்து படைக்க உள்ளனர்.
இயக்குநர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என்னும் பல பரிமாணங்களைக் கொண்டுள்ள கௌதம் வாசுதேவ் மேனனின் 20 ஆண்டு திரையுலகப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் ‘மியூசிகல் கன்வர்சேஷன்ஸ்’ என்னும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எஸ்பிளனேட் அரங்கில் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியை ‘ஆனந்த்யா எண்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் ‘டி ஐடியாஸ்’ நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
வழக்கமான இசை நிகழ்ச்சிபோல இல்லாமல், பாடப்படும் பாடல்களுக்குப் பின்னால் உள்ள ஆக்கபூர்வமான காரணங்களும் கதைகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படும் என்றார் ஆனந்த்யா நிறுவனத்தின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளருமான அரவிந்த் கிருஷ்ணா.
“2001ஆம் ஆண்டில் இதே பிப்ரவரி 2ல் கெளதம் மேனன் இயக்கிய ‘மின்னலே’ திரைப்படம் வெளியானது. புகழ்பெற்ற இந்தப் படத்தால் இந்தத் தேதி சிறப்புப் பெற்றது. மின்னியல் இசைக்கருவிகள் பயன்படுத்தப்படாத ‘அன்பிலக்ட்’ (unplugged) இசை நிகழ்ச்சியாக இது இருக்கும்,” என்றார் திரு அரவிந்த.
சிஸ்டிக் இணையத்தளத்தின் மூலம் விற்பனையாகும் நுழைவுச்சீட்டுகளின் விலை $40 முதல் $180 வரை உள்ளது. இரண்டு மணி நேரம் நீடிக்கும் இந்தப் படைப்பு இரவு 7 மணிக்குத் தொடங்கும்.
சிங்கப்பூரில் ஏறத்தாழ 3 மாதங்களுக்கு முன் தொடக்கம் கண்ட ‘ஆனந்த்யா எண்டர்டெய்ன்மென்ட்’ ஏற்பாடு செய்யும் முதல் நிகழ்ச்சியாக இது அமைகிறது. தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் இந்திய மக்களை எட்ட மேலும் பல புத்தாக்க கலைப்படைப்புகளை இந்நிறுவனம் வழங்கும் என்று கூறினார் அவர். மேல் விவரங்களுக்கு https://www.sistic.com.sg/events/GVM0220 இணையத்தளத்தை நாடலாம்.