கைத்தொலைபேசி வெடித்ததால், வீட்டில் தீப்பற்றி 54 வயது ராஜேந்திரனும் அவரது மனைவி ராணியும் உயிரிழந்தனர். அவர்களது 25 வயது மகன் ஆர்.தினேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் இச்சம்பவம் திங்கள் காலையில் நடந்துள்ளது. சொத்துச் சந்தை தொழில் செய்துவரும் தினேஷ் அதிகாலை 5 மணிக்கு கைத்தொலைபேசியில் அலாரம் வைத்திருந்தார். கைத்தொலை பேசியை 'சார்ஜ்' போட்டு விட்டுத் தூங்குவதற்கு சென்றார். தினேஷும் அவரது தாயாரும் வரவேற்பறையில் படுத்திருந்தனர்.
5 மணி அளவில் கைத்தொலை பேசியில் அலாரம் அடித்தபோது, அதை ராஜேந்திரன் நிறுத்தப் போனார். அவர் தொலைபேசியை கையில் எடுத்ததும் அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது செல்போனும் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து வீட்டில் தீப்பற்றியது. அதில் தம்பதியர் இருவரும் உயிரிழந்தனர். எனினும் வீட்டில் இருந்து காஸ் சிலிண்டரில் இருந்து காஸ் வெளியாகி இருக்கக்கூடும் என்றும் கைத்தொலைபேசி வெடித்ததில் காஸ் விரைந்து தீப்பற்றி இருக்கலாம் என்றும் போலிசார் சந்தேகப்படுகின்றனர். "கைத்தொலைபேசியை எடுக்கப்போனபோது, மின்சார இணைப்பில் இருந்து நெருப்பு வெளிவந்திருக்க வேண்டும், அதனால் தீப்பற்றி இருக்கலாம்," என விசாரணை அதிகாரி கூறினார். எனினும் தீயணைப்பு அதிகாரி சிலிண்டரும் காஸ் இணைப்பும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.