‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப போலிசார் முடிவு செய்திருக்கின்றனர்.
சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) இரவு 9.30 மணிக்கு ராட்சத மின் விளக்குகளை அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரடெக்ஷன் உதவியாளர் மது, மற்றொரு உதவியாளர் சந்திரன் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சினிமா தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீதும் தயாரிப்பு நிர்வாகியின் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் கிரேன் ஆபரேட்டர், கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப நசரத் பேட்டை போலிசார் முடிவு செய்துள்ளனர். இதேபோல் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் 10 பேருக்கும் சம்மன் அனுப்ப போலிசார் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
#இந்தியன் 2 #தமிழ்முரசு #கமல் #ஷங்கர் #விபத்து