துணி காயவைக்கும் கம்பில் மாமிசத்தை தொங்கவிட்டு காயவைத்த ஒரு குடும்பத்தாரை நீ சூன் நகர மன்றம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த வீட்டுக்கு கீழே உள்ள தளம் ஒன்றில் வசிக்கும் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈசூன் ஸ்திரீட் 11ல் உள்ள புளோக் 148ல் குடியிருப்பாளர் ஒருவர் மாமிசத்தைக் காய வைத்திருப்பதை இம்மாதம் 2ஆம் தேதி மாலை 6 மணியளவில் கண்டதாக ஸ்டோம்ப் வாசகர் டேவிட் குறிப்பிட்டார்.
தனது வீட்டு சமையலறையில் மிக மோசமான நாற்றத்தை உணர முடிந்தது என்றார் அவர்.
தன்னுடைய வீட்டுக்கு மேல் இருக்கும் வீட்டின் மூங்கில் கம்பில் சமைக்காத பன்றி மாமிசத்தை தொங்கவிட்டிருப்பதை அவர் கண்டார்.
அதன் தொடர்பில் நகர மன்றத்துக்கு அவர் தொலைபேசி வழி தகவல் சொன்னார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதியில் வசிக்கும் திரு டேவிட், இதுபோன்ற சம்பவத்தைப் பார்ப்பது முதல் முறை என்றார்.
பல கலாசார சமூகத்தில் வாழும்போது, இத்தகைய செயல்கள் ஏற்புடையவை அல்ல என்ற அவர், கொரோனா கிருமித்தொற்று அச்சம் நிலவுவதையும் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் பற்றி நீ சூன் நகர மன்ற பேச்சாளர், “அந்த வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், மாமிசத்தை இவ்வாறு வெளியில் தொங்கவிட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். அதனையடுத்து, அந்தக் குடும்பதார் அதனை நீக்கிவிட்டனர்,” என்று கூறினார்.
மறுநாளும் அங்கு சென்று பார்வையிட்டு, அத்தகைய சம்பவம் மீண்டும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்ததாகக் குறிப்பிட்ட அந்தப் பேச்சாளர், “பொதுச் சுகாதாரம், தூய்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை துணி துவைக்கும் மூங்கில் கம்பில் தொங்கவிடக் கூடாது என்பதை குடியிருப்பாளர்களுக்கு நினைவுறுத்துகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
#சிங்கப்பூர் #ஈசூன் #மாமிசம்