இணையப் பாதுகாப்பு குறித்து இளம்பருவத்தில் கற்கும் பாடங்கள் வாழ்நாள் முழுவதும் உதவக்கூடியவை என்கிறார் உயர்நிலை 4 மாணவி பிரம்மஹி.
நியூ டவுன் உயர்நிலைப்பள்ளியின் மாணவர் ஆதவுக் குழுத் தலைவராக உள்ள 15 வயது பிரம்மஹி, தமக்கும் சக மாணவத் தலைவர்களுக்கும் இதற்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
தன்னைப் போன்ற மாணவர் ஆதரவுக் குழுவின் தலைவர்களை பிரச்சினைகள் உள்ள பிற மாணவர்கள் நாடுவதாக அவர் கூறினார்.
“தங்களது பிரச்சினைகளை வகுப்பாசிரியர்களிடம் சொல்லக்கூடிய நிலைமையில் எல்லா மாணவர்களும் இருக்க மாட்டார்கள். அத்தகையோர் என்னைப் போன்ற மாணவத் தலைவர்களை நாட முடிகிறது. அவ்வாறே பலர் என்னிடம் பேசியுள்ளனர்,” என்றார் அந்த மாணவி.
பதற்றத்துடன் வரும் மாணவர்களை அமைதிப்படுத்தி, அவர்களது குறையைக் கேட்டு அவர்களுக்கு அன்புகாட்டி ஊக்கப்
படுத்துவதாகக் கூறும் பிரம்மிஹி பிரச்சினை தங்கள் கைமீறிப்போனால் அதுபற்றி ஆசிரியர்களிடம் தெரிவிப்பதாகக் கூறினார்.
இணையம் வழி துன்புறுத்தப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டுவது மட்டுமின்றி இணையத்தில் பரவும் பொய்ச்செய்திகளைப் பற்றி பிற மாணவர்களுக்கு எடுத்துரைப்பதும் இவரது பொறுப்பு.
பொய்ச்செய்திகளால் படித்த பெரியவர்களும் ஏமாறும் வேளையில் மாணவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதால் பள்ளிகளிலும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவத் தலைவர்கள் முயல்வதாக பிரம்மஹி கூறினார்.
சமுதாயக் கல்வி ஆசிரியர்கள் வழக்கமாக தங்கள் பாடங்களில் மாணவர்களுக்குப் புகட்டும் குறிப்புகளைச் சக மாணவர்களுக்கு நினைவூட்டுகிறார் அந்த மாணவி.
“ஒரு தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய சரிபார்த்தல் என்பது மிக அவசியம். இணையப் பக்கம் ஒன்றிலிருந்து குறிப்பிட்ட ஒரு செய்தியைப் பார்க்கும்போது அதனை நம்பகத்தன்மை வாய்ந்த பிற பக்கங்களுடன் ஒப்பிடுதல் அவசியம்.
“தகவல் எங்கிருந்து வந்தது என்ற மேற்கோள் இல்லாமல் இருந்தால் அதனை உண்மை என உடனடியாகக் கருதக்கூடாது.” என்று பிரம்மஹி கூறினார்.