எஸ்.வெங்கடேஷ்வரன்
அமீர் கான் நடித்த ‘டங்கல்’ இந்தித் திரைப்படத்தை நாம் மறந்திருக்கமாட்டோம். திரு மகாவீர் சிங் ஃப்போகாட் என்பவருடைய மகள்களின் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் அது. மூன்று மகள்களில் திரு மகாவீரின் மூன்றாவது மகளான ரித்து ஃப்போகாட், ‘இந்திய பெண் புலி’ (The Indian Tigress) என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். 2016ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளில் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கத்தை வென்ற குமாரி ரித்து, 2020ஆம் ஆண்டு ‘ஒலிம்பிக்’ போட்டிகளில் பங்கேற்பார் என்று அனைவரும் பெரிதும் எதிர்பார்த்திருந்த சமயத்தில் மல்யுத்த விளையாட்டையே விட்டு விலகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதைத் தொடர்ந்து பலதரப்பட்ட தற்காப்புக் கலைகளில் (Mixed Martial Arts) ஈடுபடத் தொடங்கினார்.
“மற்ற தற்காப்புக் கலை வகைகளில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததுண்டு. இந்தத் தற்காப்புக் கலை பிரபலம் பெற்றதாக இருந்தாலும் இதில் ஏன் இந்தியர்கள் உலக அளவில் இன்னும் சாதனை படைக்கவில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பலதரப்பட்ட தற்காப்புக் கலைகளில் ஈடுபட எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது நன்கு யோசித்து, பெற்றோரிடம் ஆலோசித்து, பின்னர் அதை மேற்கொள்ள முடிவெடுத்தேன். இந்த விளையாட்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதிக்க விரும்புகிறேன்,” என்றார் குமாரி ரித்து, 25.
பலதரப்பட்ட தற்காப்புக் கலைகளில் உலக வெற்றியாளர் (World Champion) ஆக வேண்டும் என்ற இலக்கு கொண்டுள்ளார் குமாரி ரித்து. பிப்ரவரி 28ஆம் தேதி சிங்கப்பூர் உள்ளரங்கத்தில் நடைபெற்ற ‘ஒன் சாம்பியன்ஷிப்’ போட்டிகளில் வெற்றிவாகை சூடினார். 156 செண்டிமீட்டர் உயரமும் 52.2 கிலோ எடையும் கொண்ட குமாரி ரித்து, சீனாவைச் சேர்ந்த ‘வூ சியாவ் சன்’னுடன் மோதினார். மூன்று சுற்றுகளில் நடுவர்களின் ஒருமானதான தீர்ப்பின்படி வூ சியாவ் சன்னை தோற்கடித்து, போட்டியை வென்றார் குமாரி ரித்து.
கிட்டத்தட்ட ஓராண்டாக சிங்கப்பூரிலுள்ள ‘இவோல்வ் எம்எம்ஏ’ (Evolve MMA) எனும் பலதரப்பட்ட தற்காப்புக் கலைகள் கற்பிக்கும் நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் ரித்து, தன் முன்னேற்றத்திற்கு தரமான பயிற்றுவிப்பாளர்களும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டார்.
“சிங்கப்பூர் வருவதற்கு முன்பு என் குடும்பத்தைவிட்டு தனியாக இருந்ததில்லை. தொடக்கத்தில் தனிமையாக இருந்தாலும் காலம் செல்ல ‘இவோல்வ்’ உறுப்பினர்களுடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கி, ஒரே குடும்பம் போல பழகி வருகிறேன். நம் கவனத்தை எதிலும் சிதறவிடாமல் பயிற்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டால் இலக்குகளை எட்ட முடியும்,” என்கிறார் ரித்து. இவரது மூத்த சகோதரி கீதா ஃப்போகாட் 2010ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளில் பெண்கள் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். திரு மகாவீரின் இரண்டாவது மகளான பாபித்தா குமாரியும் 2014ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளில் அதே மல்யுத்தப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஏழு வயதிலிருந்து தமது தந்தையோடும் சகோதரிகளோடும் மற்போர் பயிற்சிகளைச் செய்யத் தொடங்கிய ரித்து, தமது சகோதரிகளை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கூடிய விரைவில் பலதரப்பட்ட தற்காப்புக் கலைகளில் உலக வெற்றியாளராகச் சாதிப்பார் என்ற நம்பிக்கையுடன் தயாராகிறார் இளைஞர் ரித்து.