சிங்கப்பூர் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஒரே வாரத்தில் டெங்கி தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துவிட்டது.
கடந்த வாரம் 1,158 டெங்கி சம்பவங்கள் பதிவாகின. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 870 சம்வங்களுடன் ஒப்புநோக்க, இந்த எண்ணிக்கை 33 விழுக்காடு அதிகம்.
நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, இவ்வாண்டு இதுவரை மொத்தம் 11,166 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, பெரும்பாலான ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையைவிட அதிகம்.
ஒவ்வோர் ஆண்டும் பதிவான டெங்கி சம்பவங்களைப் பார்க்கையில், கடந்த 50 ஆண்டு காலகட்டத்தில் ஆறு முறை மட்டுமே இந்த எண்ணிக்கையைவிட அதிகமான சம்பவங்கள் பதிவாகி இருந்தன.
இதுநாள் வரை, 2013ஆம் ஆண்டில்தான் ஆக அதிகமாக 22,170 டெங்கி சம்பவங்கள் பதிவாகி இருந்தன. ஆனால், அதையும் மிஞ்சும் அளவிற்கு இவ்வாண்டு முழுவதுக்குமான டெங்கி தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டும் சாத்தியம் இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது 221 டெங்கி தொற்று குழுமங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளன.
ஆகப் பெரிய டெங்கி தொற்று குழுமம் பொத்தோங் பாசிர் அருகே உட்லீயில் உள்ளது. அதில் 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை டெங்கி தொற்று சம்பவங்கள் அதிகமாக பதிவாகும். இதன் காரணமாக வார அடிப்படையிலான தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும்.
இந்நிலையில், டெங்கி தொற்றை முறியடிப்பதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய சுற்றுப்புற வாரியம் அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக, டெங்கி தொற்றும் நால்வரில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவ உதவியை நாடும் அளவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது. அத்தகையோரில் ஐவரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாண்டு இதுவரை 12 பேர் டெங்கி பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online