கொரோனா கிருமி பரவலைக் குறைக்க கழிவறைத் தொட்டியை மூடி 'ஃபிளஷ்' செய்வது நல்லது: ஆய்வு
கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றுடன், கழிவறைத் தொட்டியின் மூடியை மூடி, பின்னர் ‘ஃபிளஷ்’ செய்வது கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கழிவறைத் தண்ணீர், காற்று போன்றவற்றை செயற்கையாக உருவாக்கி பரிசோதனை மேற்கொண்டதில், கழிவறைத் தொட்டியில் ‘ஃபிளஷ்’ செய்யும்போது உருவாகும் மிகச் சிறிய நீர்த் திவலைகளுடன் கூடிய காற்றில் கிருமிகள் கலந்திருக்கக்கூடும் என்றும் அதை மக்கள் சுவாசிக்க நேரலாம் என்றும் தி வாஷிங்டன் போஸ்டில் வெளியான அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
கொவிட்-19 நோயாளிகளின் மலத்தில் கொரோனா கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், கொவிட்-19 ஏற்படுத்துவதற்கு அந்தக் கிருமிகள் போதுமானதாக இருக்குமா என்று தெரியவில்லை என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே, கழிவறைத் தொட்டியை மூடி பிறகு ‘ஃபிளஷ்’ செய்வது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும், கொவிட்-19 நோயாளிகள் பயன்படுத்திய கழிவறைத் தொட்டி, தரை, நீர்க் குழாய், அருகில் உள்ள தளங்கள் ஆகியவற்றிலும் கொரோனா கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், கழிவறைக்குச் சென்று திரும்பிய பிறகு கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online