சிங்கப்பூர் தற்போதைய நெருக்கடியை வெற்றி கொள்வதோடு மேலும் வலுவடைந்த சமூகமாக மீண்டெழும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தமது தேசிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைச் சாதிக்க அரசாங்கத்துக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான பங்காளித்துவம் துணைபுரியும் என்றும் கொள்ளைநோய், மோசமடைந்த பொருளியல் ஆகிய இரட்டை மிரட்டலை எதிர்கொள்ள அந்தப் பங்காளித்துவம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கக் கருவூலக் கட்டடத்திலிருந்து அவர் ஆற்றியது சிங்கப்பூரின் ஆறாவது, இறுதி தேசிய உரையாகும்.
கொரோனா கிருமிக்குப் பிந்திய நாட்டின் எதிர்காலம் தொடர்பில் இந்த தேசிய உரைத் தொடர் அமைந்தது. சிங்கப்பூரர்களும் அரசாங்கமும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வடிவமைக்கும் திட்டங்கள் குறித்த அறிவிப்பை திரு ஹெங் வெளியிட்டார்.
அடிப்படை, செயல்முறை ஆய்வுகளை ஆதரிக்க 20 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகம் எதிர்நோக்கும் பெரும் சவால்களுக்கு முன்னோடித் தீர்வுகளைக் கண்டறிய நமது மக்களை ஒன்றுதிரட்டும் வகையில் புத்தாக்கச் சவால்களை ஒரு தொடராகத் தொடங்க இருக்கிறோம்.
“‘ஒரு தலைமுறைக்கான நெருக்கடி’யைச் சமாளிக்கும் வகையிலான ஆதரவுத் திட்டங்களுக்காக அரசாங்கம் ஏற்கெனவே கிட்டத்தட்ட $100 பில்லியனை ஒதுக்கி உள்ளது.
“நூறு நாட்களுக்குள் அடுத்தடுத்து நான்கு வரவுசெலவுத் திட்டங்களை தாக்கல் செய்வேன் என்று நான் ஒருபோதும் எதிர்பார்த்தது இல்லை. நமது வரலாற்றில் அவ்வாறு நிகழ்ந்தது இல்லை. இந்த நடவடிக்கைகள் மூலம் வலுவான திட்டங்களை முன்வைத்திருக்கிறோம். நாம் இவ்வாறு ெசய்யாவிடில் பல்லாண்டு வளர்ச்சியையும் ஒட்டுமொத்த தலைமுறையையும் நாம் இழக்க நேர்ந்திருக்கும்.
“இப்போது நாம் ஒதுக்கி இருக்கும் தொகையில் பாதிக்கும் மேற்பட்டது நாட்டின் கடந்த கால நிதியிருப்பில் இருந்து பெறப்பட்டது. நமது முன்னோடித் தலைமுறை சிங்கப்பூரர்களின் சிரமத்தில் உருவான நிதி அது.
“அவர்கள் சிந்திய ரத்தம், வியர்வை, கண்ணீரும் இந்த நிதியிருப்புகளை விட்டுச் சென்றுள்ளன. எனவே, இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டவுடன் நமது தலைமுறையையும் நிதியிருப்புகளையும் மீண்டும் வளமாக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்வோம்,” என்று கேட்டுக்கொண்டார் நிதி அமைச்சருமான திரு ஹெங்.
வேலைகளைக் காப்பதுதான் இப்போதைய உடனடி நடவடிக்கை என்று அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.
“குறைந்த வருமான ஊழியர்கள் மீது நாம் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம். வேலை நலன் திட்டத்தில் பயன்பெறுவோர் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க விரைவில் கூடுதலான நிதியைப் பெற இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தொழிலை மேம்படுத்த முதலாளிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் இணைந்து பாடுபடுகிறோம்.
“இருப்பினும் இந்த முயற்சிகளுக்கும் அப்பால் பலர் வேலைகளை இழக்கக்கூடும். அதனை கவனத்தில் கொண்டுதான் இயன்ற வரை அதிகமான வேலைகளை உருவாக்க அரசாங்கம் பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய வேலைகள் மன்றம் மூலம் 100,000 வேலைகளையும் பயிற்சி வாய்ப்பு
களையும் உருவாக்க நாம் இலக்கு வகுத்துள்ளோம்.
“நாம் செய்து வரும் வேலைதான் நமது தலையாய முன்னுரிமை. நமது வாழ்க்கையை மேம்படுத்தவும் நமது அன்புக்குரியவர்களை ஆதரிக்கவும் வேலை ஒன்றுதான் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் நேரடியாக உதவக்கூடியது.
“இந்த நோக்கத்துடன் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றுவோம். நமது மக்கள் மீது முதலீடு செய்வோம். தொழிலாளர்களும் இளையர்களும் நிறைந்த தலைமுறையை இழந்துவிடக் கூடாது என்பதில் நாம் தீர்மான மாக இருக்கிறோம்,” என்று திரு ஹெங் தமது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டார்.
தேசிய உரைத் தொடரை முடித்து வைத்துப் பேசிய அவர், பொருளியலை வளர்க்கவும் வேலைகளைக் காக்கவும் அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
“நமது வருங்காலப் பயணம் நெடியது. அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கான நமது செயல் திட்டங்கள் இனி வர இருக்கும் பல ஆண்டுகளுக்கான நமது தேசத்தின் பாதையை வடிவமைக்கக்கூடியதாக இருக்கும்,” என்றார் அவர்.