எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி 4 குழுத் தொகுதிகளிலும் 2 தனித் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஜுனிட் குழுத்தொகுதி, ஹவ்காங் தனித்தொகுதி ஆகியவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முற்படும் அதே வேளையில், மரின் பரேட் குழுத்தொகுதி, செங்காங் குழுத்தொகுதி, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி, பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதி ஆகியவற்றிலும் வேட்பாளர்களை நிறுத்தும்.
இன்று (juun 25) நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் இரண்டு புதிய வேட்பாளர்களை அறிவித்தபோது இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
முதலீட்டு வங்கி ஒன்றில் ஆய்வு பகுப்பாய்வாளராக இருக்கும் 33 வயதான திரு லுயிஸ் சுவா கெங் வீ, பொருளியல் துறையில் பணியாற்றும் 34 வயதான திரு முகம்மது அஸார் அப்துல் லத்திப் ஆகிய முதல் இரண்டு வேட்பாளர்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டனர்.
முந்தைய தேர்தல்களில் போட்டியிட்ட வேறு இரண்டு வேட்பாளர்களும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இணை இயக்குநராக இருக்கும் 33 வயதான திருவாட்டி நிக்கோல் சியா அவர்களில் ஒருவர். பாட்டாளிக் கட்சியின் தொண்டூழியராக 2015ஆம் ஆண்டு முதல் அவர் இருந்து வருகிறார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் வேட்பாளராக இருந்தவர்.
கல்வித்துறையில் தொழில்முனைவராக இருக்கும் 55 வயது யீ ஜென் ஜோங் இன்று அறிமுகம் கண்ட மற்றொரு நபர். அவர் 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
கடந்த 2015 பொதுத்தேர்தலில் 28 வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் இந்த தேர்தலில் 21 வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்படுவதற்கான காரணம் பற்றி கேட்டதற்கு, கட்சியின் ஆகச் சிறந்த வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
“அவர்கள் சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் நன்கு பிரதிநிதிக்க வேண்டும் என விரும்புகிறோம்,” என்று திரு சிங் குறிப்பிட்டார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online