பெக்கான்: மலேசியாவின் கிழக்கு மாநிலமான பாகாங்கின் சினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வென்றுள் ளது. அதன் வேட்பாளர் முகம்மது ஷரிம், 41, மொத்தம் 13,872 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.
இரு சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டனர். அவர்களில் ஒருவரான ஜைனுல் ஷிஷாம் என்னும் வர்த்தகர் 1,222 வாக்குகளையும் சமூகநல ஆர்வலரான முகம்மது சுக்ரி 137 வாக்குகளையும் பெற்றனர். முடிவாக, 12,650 வாக்குகள் வித்தியாசத்தில் திரு ஷரிம் வென்றார். 14வது பொதுத் தேர்தலில் இத்தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளரான அபு பக்கார் ஹாருனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காட்டிலும் இவர் 4,622 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் காலத்தில் மலேசியாவில் நடைபெற்றிருக்கும் முதல் தேர்தல் என்பதோடு மார்ச் மாதம் முகைதீன் யாசின் பிரதமர் பதவி ஏற்ற பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் இது. எனவே முகைதீன் யாசினின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த சான்றாக தேசிய முன்னணியும் அதனுடன் இணைந்துள்ள பாஸ் கட்சியும் கூறியுள்ளன. திரு முகைதீனின் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி இவ்விரு கட்சிகளுக்கும் அதரவு வழங்கி வருகிறது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நாடு முழுவதும் நடைபெற்ற ஆறு இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணி வென்றுள்ளது.
கேமரன் மலை, தஞ்சோய் பியாய், கிம்மானிஸ் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் செமினி, ரந்தாவ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்த முன்னணியின் வேட்பாளர்கள் வாகைசூடியதைத் தொடர்ந்து சனிக்கிழமை வெற்றியும் சேர்ந்துள்ளது. இதனைப் பட்டியலிட்ட அம்னோ தலைவர் அகமது சாஹிட் ஹமிடி, மக்களின் விருப்பத் தேர்வாக இன்னும் தேசிய முன்னணியே தொடருகிறது என்றார். தேசிய முன்னணியின் சின்னம் மக்களிடம் எடுபடாது என்ற வாதம் இந்த வெற்றிகளின் மூலம் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.