பாடகர், நடிகர் என இரு தளங்களிலும் வெற்றிகரமாகப் பயணம் செய்ய முடிகிறது என்கிறார் விஜய் யேசுதாஸ்.
பாடகராக வெற்றி பெற்ற பிறகுதான் நடிக்கவேண்டும் என்று தந்தை யேசுதாஸ் கண்டிப்புடன் கூறிவிட்டதால் தற்போது 41 வயதாகும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்புதான் நடிகராக முடிந்தது என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என் தாத்தா நாடக நடிகர், தந்தை பாடகர் என்பதுதான் நான் பாடகராகக் காரணமா என்பது தெரியவில்லை. எப்படியோ நடிகர், பாடகர் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.
“எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு உள்ளிட்ட பல திரையுலக வாரிசுகள் என் நட்பு வட்டத்தில் உள்ளனர்.
“அவர்கள் சினிமாவில் நடிக்கத் துவங்கியபோதே என்னையும் நடிக்க அழைத்தனர். மலையாள இயக்குநர் பாசில் சார் கூட ஒரு படத்தில் நடிக்கக் கேட்டார். ஆனால், வீட்டில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை,” என்கிறார் விஜய் யேசுதாஸ்.
படிப்பை முடிக்கவேண்டும், பாடகராக வெற்றி பெறவேண்டும் என்று குடும்பத்தார் திட்டவட்டமாகக் கூறியதால் பாடகராவதில் கவனம் செலுத்திய விஜய், அதுவே தமக்குப் பலமாகவும் பலவீனமாகவும் அமைந்துவிட்டது என்கிறார்.
“எனக்கு இப்போது 41 வயதாகிறது. பாடகனாகப் பரவலாக அறிமுகமாகி இருக்கிறேன்.
“அதேசமயம் 20 வருடங்களுக்கு முன்பு நான் நடிக்க விரும்பிய கதாபாத்திரங்களை இப்போது ஏற்க இயலாது. அதனால் வயதுக்குத் தகுந்த வேடங்களாக நடிப்பைத் தொடர்கிறேன்,” என்று சொல்லும் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் நிபந்தனை விதிப்பதில்லை.
தனுசுடன் ‘மாரி’ படத்தில் நடித்து முடித்தவர், அடுத்து ‘படைவீரன்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
“சில மாதங்களுக்கு முன்பு ‘படைவீரன்’ படத்துக்கான சிறப்புக் காட்சிக்கு வருகை தந்த தனுஷ், என் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். ‘நடிப்பு நன்றாக இருக்கிறது. ‘மாரி’யிலும் இதேபோல் நடித்திருக்கலாமே’ என்று நகைச்சுவையாகக் கூறினார். மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களும் என் நடிப்பைப் பாராட்டினர்,” என்று சொல்லும் விஜய் யேசுதாஸ், தற்போது முப்பரிமாணப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறதாம். முதன்முறையாக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நடித்திருப்பதால் மற்றவர்களைப் போலவே தனக்கும் அப்படத்தைத் திரையில் காண ஆர்வமாக இருக்கிறது என்கிறார். ஒருவகையில் இது தமது கனவுப்படம் என்றும் குறிப்பிடுகிறார்.
விஜய் யேசுதாஸ் பாடியுள்ள பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, தாம் பாடிய மெல்லிசைப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன என்கிறார்.
“கூடுமான வரை வெவ்வேறு விதமான பாடல்களையே பாட முயற்சிக்கிறேன். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. ‘சண்டக்கோழி’யில் இடம்பெற்ற ‘தாவணி போட்ட’, ‘தீபாவளி’ படத்தில் ‘காதல் வைத்து காதல் வைத்து’ உள்ளிட்ட பாடல்கள் என்னையும் வெகுவாகக் கவர்ந்தவை.
“ஒரு பாடகராக எனக்குப் பிடிக்காத விஷயம் என்றால், பேச ஆரம்பித்ததுமே இரண்டு வரி பாடிக் காட்டுங்கள் என்று கேட்பதுதான். ஆனால், அவையெல்லாம் கடந்து இப்போது பக்குவமாகி விட்டேன்.
“பாடகரிடம் மட்டும்தான் பாடச் சொல்லிக் கேட்பவர்கள், நடிகர்களிடம் மட்டும் பெரும்பாலும் நடிக்கச் சொல்லிக் கேட்பதில்லை,” என்று சொல்லும் விஜய், தொடர்ந்து நடிகராகவும் பாடகராகவும் வெற்றி நடை போட விரும்புகிறாராம். ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடம் பிடிக்கவேண்டும் என்பதே தமது இலக்கு என்றும் சொல்கிறார்.
“ஒரு பாடகராக ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். ஒரு நிகழ்ச்சிக்கு ஐநூறு பேர் வந்தாலும் நம் கண்ணெதிரே பத்தாயிரம் பேர் இருந்தாலும் அவர்களின் ரசனைக்கு ஏற்ப நன்றாகவும் நம் மனசாட்சிக்கு ஏற்ப உண்மையாகவும் பாடவேண்டும். நாம் பாடியது பிடித்துப்போய் ஐம்பது பேர் கேட்டாலே, கைதட்டினாலே போதும்,” என்கிறார் விஜய் யேசுதாஸ்.