வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோரில், தனிமைப்படுத்தல் வளாகங்கள் தவிர வேறு இடங்களில் இல்லத் தனிமைப்படுத்தல் ஆணையை நிறைவேற்றினால், அவர்களது நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பொருட்டு அவர்கள் மின்னணுவியல் சாதனம் ஒன்றை அணிய வேண்டியிருக்கும்.
இம்மாதம் 10ஆம் தேதி இரவு 11.59 முதல், அத்தகைய பயணிகள் தனிமைப்படுத்தலுக்குள்ளாகும் 14 நாட்களில் எல்லா நேரமும் அந்தச் சாதனத்தை அணிய வேண்டும்.
கடந்த மார்ச் 21 முதல் சிங்கப்பூருக்குள் வரும் அனைவருக்கும் இல்லத் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் விரிவுபடுத்தப்பட்டன.
தனிமைப்படுத்தல் வளாகங்களிலோ அல்லது அவர்களது வீடுகளிலோ தனிமைப்படுத்திக்கொள்ளும் அவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிவதற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், மனிதவள அமைச்சு ஆகியவை இணைந்து இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில், தனிமைப்படுத்தலில் இருப்போரை திறம்பட இந்தச் சாதனம் கண்காணிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட இடங்களில் தங்கியிருக்கிறார்களா என்பதை அறிய, அதிகாரிகள் காணொளி அழைப்புகள், வீடுகளுக்குச் சென்று பார்வையிடுதல் போன்றவற்றில் முன்பு ஈடுபட்டனர். இந்தச் சாதனம் அந்தப் பணிகளுக்குப் பதிலாகப் பயன்படும்.
குடிநுழைவு நடைமுறைகள் சோதனைச் சாவடிகளில் நிறைவுற்றதும் இந்தச் சாதனம் வழங்கப்படும் என்றும் அவர்கள் தங்கும் இடத்துக்குச் சென்றதும் அதனைச் செயல்பாட்டு நிலையில் வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.