கட்டுமானம், கப்பல் பட்டறை, செயல்முறைப் பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த 265,000 வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
அவர்களில் 180,000 பேர் விடுதிகளில் தங்கியிருப்பவர்கள்.
கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது அம்மூன்று துறைகளிலும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனிடையே, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து வெளிநாட்டு ஊழியர் விடுதிகளையும் கொவிட்-19 தொற்றில் இருந்து விடுவிக்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது.
ஆயினும், எட்டு வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் உள்ள குறிப்பிட்ட 17 புளோக்குகள் தனிமைப்படுத்தும் இடங்களாகத் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அந்த புளோக்குகளில் இப்போது கிட்டத்தட்ட 9,700 ஊழியர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஊழியர்கள் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வேலைக்குத் திரும்புமுன் அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ‘வெஸ்ட்லைட் மண்டாய்’ விடுதியில் உள்ள ஒரு புளோக்கும் தனிமைப்படுத்தும் இடமாகச் செயல்படும்.
நேற்று வரை, மேலும் 127 வெளிநாட்டு ஊழியர் விடுதிகள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தத்தில் 1,109 வெளிநாட்டு ஊழியர் விடுதிகளும் தேறிய ஊழியர்கள் தங்க வைக்கப்பட்ட 14 விடுதிகளிலலுள்ள 52 புளோக்குகளும் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கிட்டத்தட்ட 273,000 வெளிநாட்டு ஊழியர்கள், அதாவது தங்கும் விடுதிகளில் வசித்து வரும் ஏறத்தாழ 90% ஊழியர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாக அல்லது கிருமித்தொற்று இல்லை எனப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக கிருமி தொற்றும் அபாயத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை தங்கும் விடுதி நடத்துநர்களும் முதலாளிகளும் ஊழியர்களும் எடுக்க வேண்டும். அதன்பின், கிருமித்தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதிகளில் அல்லது தேறிய ஊழியர்களுக்கான புளோக்குகளில் இருப்போரில் பெரும்பாலானவர்கள் அன்றாட வேலைக்குத் திரும்பலாம்.
மீண்டும் வேலை செய்யத் தொடங்க அனுமதி பெற்ற ஊழியர் ஒருவர், சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுத்தபின் தமது ‘எஸ்ஜி ஒர்க்பாஸ்’ செயலியில் பச்சை நிற அனுமதிக் குறியீடு இடம்பெற்றிருப்பதைக் காணலாம். அதற்குமுன் அந்த ஊழியர்கள் குறிப்பிட்ட ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது உடல்நிலை பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும்.
“பல தங்கும் விடுதிகள் பெரும்பாலான உடனடியாக அந்த நடவடிக்கைகளை நிறைவேற்றும். ஒரு வாரத்திற்குள் அல்லது சில நாட்களிலேயே கிட்டத்தட்ட எல்லா விடுதிகளும் அவற்றைப் பூர்த்தி செய்யும்,” என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தமது 300 ஊழியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் இப்போது மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியும் என்பதால் நிம்மதி அடைந்துள்ளார் பெங் கிம் இன்ஜினியரிங் கண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனத்தின் இயக்குநர் திரு தாமஸ் ஓ.
நிதி நெருக்கடி உட்பட கட்டுமானத் துறை எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்து நூற்றுக்கு மேற்பட்ட துணை ஒப்பந்ததாரர்கள் கடந்த ஜூன் மாதம் அரசாங்கத்திற்கு எழுதினர். அவர்களில் திரு தாமஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.