பொருளியல் மந்தநிலை மோசமடையும் நிலையிலும் வேலை ஆதரவுத் திட்டம் முடிவுக்கு வரும் நிலையிலும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவி செய்யும் என்று வர்த்தக, தொழிற்சங்க தலைவர்களுக்கு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உறுதியளித்துள்ளார்.
பொருளியல் கொள்கைகளுக்கு ஒருங்கிணைப்பு அமைச்சரும் நிதியமைச்சருமான திரு ஹெங், பொருளியல் நிலவரத்துக்கு ஏற்ற வகையில் இந்தத் திட்டங்களை ஆய்வுசெய்ய அரசு அமைப்புகளுடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
அரசாங்க ஆதரவுத் திட்டங்கள் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக படிப்படியாக குறைக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பொருளயல் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியீட்டின்போது கூறப்பட்டது.
இந்நிலையில் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் பொருளியல் இவ்வாண்டின் முதல் பாதியில் 6.7% சுருங்கியுள்ளது. அத்துடன் ஆண்டு முழுவதும் 5 இலிருந்து 7 விழுக்காடு வரை வீழ்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பதிவில் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, வர்த்தக துணை அமைச்சர் லோ யென் லிங், தொழிற்சங்கத் தலைவர் இங் சீ மெங் ஆகியோருடன் கடந்த இரு நாட்களாக அரசாங்க ஆதரவுத் திட்டங்களில் செயல்பாடு குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
“இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றவர்கள் அரசின் இந்தத் திட்டங்கள் காலவரம்பின்றி நீடிக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டதுடன் வர்த்தகங்களுக்கு, ஊழியர்களுக்கான ஆதரவில் இனி வரும் மாதங்களில் எத்தகைய மாற்றம் இருக்கும் என வினவினர்.
“ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று நான் அவர்களுக்கு உறுதி கூறினேன்,” என்றார் அவர்.
பொருளியல் மீட்சி அதிக காலம் எடுக்கக் கூடும் என்று குறிப்பிட்ட திரு ஹெங், ஊழியர் சந்தையில் கொரோனா கிருமித் தொற்றின் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றார். இந்நிலையில் இந்த நெருக்கடியிலிருந்து மீளும் வழிகளை ஆராய்ந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.
இதில் சில நிறுவனங்கள் தற்போதைய வர்த்தகங்களைக் கைவிட்டு, தங்களுடைய வலிமைக்கு ஏற்ற வகையில் புதுப்புது துறைகளில் ஈடுபட்டுள்ளனர். பல நிறுவனங்கள் மின்னிலக திட்டங்களை விரிவுபடுத்தி இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார் துணைப் பிரதமர்.
முத்தரப்பு பங்காளித்துவ உறவுகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரர்கள் புதுத் திறன்களைப் பெறவும் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பிந்திய உலகத்துக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது குறித்தும் பல யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன என்று திரு ஹெங் தெரிவித்தார்.