கொரோனா கிருமிப் பரவலுக்கு 20, 30, 40 வயதுகளில் இருப்பவர்கள் காரணமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. அவர்களில் பலர் தங்களுக்கு கிருமி தொற்றி இருப்பதை அறியவில்லை என்பதால் எளிதில் பாதிக்கப்படக்கூடியோருக்கு அவர்களால் ஆபத்து நேரலாம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது.
உலகளவில் இம்மாதம் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது, பலவீனமான சுகாதார சேவைகளும் அதிக மக்கள் தொகையும் கொண்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர், உடலநலமற்றோர் உட்பட எளிதில் பாதிக்கப் படக்கூடியவர்களுக்கு ஆபத்தை அதிகரித்துள்ளது என்று நிறுவனத்தின் அதிகாரிகள் கூறினர்.
நோய்த்தொற்று மாற்றம் கண்டு வருகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் வட்டாரத்துக்கான இயக்குனர் தகேஷி கசாய் நேற்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“20, 30, 40 வயதுகளில் இருப்போர் கிருமியைப் பெருமளவில் பரப்புகின்றனர். இதில் பலருக்கு தங்களுக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரியாது.
“இவர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது,” என்றார் அவர்.