வெளிநாட்டு ஊழியர்களையும் தங்கும் விடுதிகளின் செயல்முறைகளையும் ஆதரிக்க புதிய பிரிவு ஏற்படுத்தப்படுவதாக மனிதவள அமைச்சு தெரிவித்து உள்ளது.
நம்பிக்கை, கவனிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழுமம் என்னும் பொருள்படும் ‘ஏஸ்’ (ACE) என்னும் பெயரிலான அக்குழுமம் அதன் பணிகளை படிப்படியாகத் தொடங்கும்.
கொள்ளைநோய் பரவத் தொடங்கியபோது வெளிநாட்டு ஊழியர்களையும் அவர்கள் தங்கி இருந்த விடுதிகளையும் கவனித்துக்கொள்ள ஏப்ரல் முற்பகுதியில் பல அரசாங்க அமைப்புகளை உள்ளடக்கிய பணிக்குழு அமைக்கப்பட்டது.
தங்கும் விடுதிகள் அனைத்தும் கொவிட்-19 கிருமித்தொற்று அபாயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதால் பணிக்குழு தனது செயல்முறைகளை புதிய ஏஸ் குழுமத்திடம் ஒப்படைக்கும்.
இம்மாதமும் அடுத்த மாதமும் பல கட்டங்களாக அந்த ஒப்படைப்பு நிகழும்.
அதன் பின்னர், அக்டோபர் 1 முதல் வெளிநாட்டு ஊழி யர், தங்கும் விடுதிகள் என்னும் இரு அம்சங்களிலும் ஏஸ் முழுக் கவனம் செலுத்தும்.
கிருமித்தொற்று அபாயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட விடுதிகளில் அதிக மீள்திறனை ஏற்படுத்தவும் ஊழியர்களுக்கு புதிய வகை பொது சுகாதார மிரட்டல்கள் உருவாகாமல் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சி
களைத் தொடருவதில் குழுமம் கவனம் செலுத்தும்.
தங்கும் விடுதிகளை நடத்துவோரிடத்திலும் அவற்றில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்களிடத்திலும் நம்பிக்கை ஏற்படுத்துதல், விரிவான மருத்துவ ஆதரவை அளித்து அவர்களைக் கவனித்துக்கொள்ளுதல், சிங்கப்பூரர்கள், ஊழியர் குழுக்கள், முதலாளிகள், தங்கும் விடுதி நடத்துநர்கள் ஆகியோருடன் வலுவான பங்காளித்துவத்தை ஏற்படுத்த ஊழியர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை குழுமம் மேற்கொள்ளும்.
புதிய பிரிவின் வரவால் தங்கும் விடுதிகளில் இதுவரை பணிகளை மேற்கொண்டு வந்த வட்டார சுகாதாரக் குழுமங்களான தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் சிங்ஹெல்த் குழுமமும் அப்பணிகளைக் கைவிடும்.
இதுநாள் வரை வெளிநாட்டு ஊழியர்களை எல்லா வழிகளிலும் கவனித்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்ட பணிக்குழு வுக்கு மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தமது நன்றி தெரிவித்துக்கொண்டு உள்ளார். இந்த மாபெரும் பணியில் பலதரப்பட்ட அரசு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 3,000 அதிகாரிகள் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
“எங்கள் பணி இன்னும் நிறை வடையவில்லை. வெளிநாட்டு ஊழியர்களுக்கான பராமரிப்பு நீண்ட காலத்துக்குத் தொடரும் வகையில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிலையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதிலும் அவர்கள் சிறந்த முறையில் தங்கி இருக்கவும் எதிர்கால பொது சுகாதார அபாயத்திலிருந்து அவர்களைக் காக்க வும் இது முனைப்புடன் ஈடுபடும்,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள திருவாட்டி டியோ, அரசாங்க அமைப்புகளின் பணிக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து காணொளி ஒன்றை தமது பதிவுடன் இணைத்துள்ளார்.
மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தமது ஃபேஸ்புக் பதிவில், “புதிய பிரிவுக்கு நிறைய பணிகள் காத்திருக்கின்றன. இனி மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தெரிவிக்கிறேன்,” என்று குறிப்பிட்டார். இப்பிரிவை இவரே கண்காணிக்க உள்ளார்.