அனைத்துலகப் பயணத்தைப் படிப்படியாக மீண்டும் தொடங்க ஜி-20 நாடுகள், அனைத்துலக அமைப்புகள் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் இணைந்து செயல்படும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடிநிலை இன்னும் தீராத நிலையில் முழுமையான சோதனைகள், நோயாளி களுடன் தொடர்பில் இருந்தோரை அடையாளம் கண்டு தேடுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அனைத்துலகப் பயணம் மீண்டும் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாரத் தொடக்கத்தில் புருணையுடனும் தென்கொரியாவுடனும் சிறப்புப் பயண ஏற்பாடுகள் குறித்து சிங்கப்பூர் அறிவித்தது.
இந்தச் சிறப்பு ஏற்பாடு மூலம் இவ்விரு நாடுகளுக்கும் சிங்கப்பூரிலிருந்து அத்தியாவசிய, அதிகாரபூர்வப் பயணங்களை மேற்கொள்ளலாம். ஜி-20 நாடுகளின்
வெளியுறவு அமைச்சர்களுக்கான சிறப்பு மெய்நிகர் கூட்டத்தில் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் கலந்துகொண்டார்.
உலகளாவிய ஒருங்கிணைப்புக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்்.
ஜி-20 நாடுகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்குவது ஆகியவற்றுக்கு இந்தக் குழுமம் அழைப்பு விடுக்கிறது.
நாடுகளுக்கு இடையே அனைத்துலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என்று டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூட்டத்தின்போது தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் கூடுதல் மீள்திறன் கொண்ட மீட்புத் திட்டத்தை உருவாக்க செயல்பட வேண்டும் என்று கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்படுத்திய கடுமையான சவால்களை எதிர்கொள்ள அனைத்
துலகச் சமூகத்தை ஊக்குவிக்க சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மெச்சினார். உலகளாவிய நிலையில் பொருட்களுக்கான விநியோகங்களைத் தொடர்வது, சமுதாயங்களுக்கான மின்னிலக்க உருமாற்றத்தை விரைவுப்படுத்துவது ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சிகிச்சைகளும் தடுப்பூசிகளும் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றார் அமைச்சர்.