சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு சமூகத்தினரிடையே பகைமையை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததற்கும் நீதிமன்றத்தை அவமதித்ததற்கும் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு போலிசார் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடன் ஆலோசனை நடத்தி விசாரணையை முடித்துவிட்டதாக போலிசார் இன்று கூறினர்.
அண்மையில் பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்களின்போது ஜூலை மாதம் 4ஆம் தேதியிலும் 5ஆம் தேதியிலும் திருவாட்டி ரயீசா கானுக்கு எதிராக போலிசில் புகார் செய்யப்பட்டது.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்தும், இவ்வாண்டு மே மாதம் 17ஆம் தேதி ராபர்ட்சன் கீ வட்டாரத்தில் பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறையைப் புறக்கணித்த ஏழு வெளிநாட்டவர்களைப் பற்றியும் சமூக ஊடகத்தில் திருவாட்டி ரயீசா கான் பதிவு செய்திருந்த கருத்துகள் தொடர்பாக புகார்கள் செய்யப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதியன்று நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சிக் குழுவில் திருவாட்டி ரயீசா கானும் ஒருவர். 52.1 வாக்குகளைப் பெற்று செங்காங் குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சி கைப்பற்றியது.
பிறர் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய, முறையற்ற கருத்துகளைப் பதிவிட்டதற்குக் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி ரயீசா கான் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு சமூகத்தினர், பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். மாறாக, சிறுபான்மையினர் விவகாரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.