மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் 2023ஆம் ஆண்டில் நடத்தப்பட்டால் அதில் போட்டியிடப்போவதில்லை என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
அப்போது தமக்கு 98 வயதாகிவிடும் என்றார் அவர்.
இருப்பினும், தம்மால் அமைக்கப்படும் புதிய கட்சிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
இந்தத் தகவலை பெர்னாமா செய்தி நிறுவனத்தின் லங்காவி அலுவலகம் தெரிவித்தது.
பொதுத் தேர்தல் 2023ஆம் ஆண்டுக்கு முன்பு நடத்தப்பட்டால் அதில் போட்டியிடுவாரா என்பது குறித்து டாக்டர் மகாதீர் தெரிவிக்கவில்லை.
அடுத்த தேர்தல் 2023ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது மலேசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக அடுத்த சில மாதங்களிலேயே தேர்தல் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.