கொரோனா நோய் பரவலின் காரணமாக இம்முறை ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் விழா புதுமையான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.
இம்மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள முன்னோட்ட நிகழ்ச்சியையும், நவம்பர் 1, 8, 15ஆம் தேதிகளில் நடக்கும் விருது விழா நிகழ்ச்சிகளையும் சிங்கப்பூர், மலேசிய பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் காணலாம்.
தொலைக்காட்சி நாடகக் கலைஞர்களை அங்கீகரிக்கும் இந்த வருடாந்திர விருது விழா நிகழ்ச்சி மூன்றாம் முறையாக இவ்வாண்டு நடக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை நேரு அரங்கில் நடந்த இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர்.
கிட்டத்தட்ட 14 மணி நேர நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் 24 பிரிவுகளில் விருதுகள் உட்பட சிறப்பு விருதுகளும் நிகழ்வில் வழங்கப்படும் என்றும் திங்கட்கிழமை நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார் ஜீ தமிழ் நிகழ்ச்சி தலைவரான திரு தமிழ் தாசன்.
“ஒரு பெரிய அரங்கில் 6,000 பேரின் கைதட்டல்களால் ஏற்படும் உணர்வை 100 பேர் வைத்து உருவாக்கவேண்டும். அதில்தான் பெரிய சவால் உள்ளது. அதே தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருறோம்,” என்றார் திரு தமிழ் தாசன்.
மாறுபட்ட முயற்சியாக ஜீ தமிழ் நட்சத்திரங்கள் மூன்று நாட்களுக்கு ஒரே வீட்டில் தங்கி இருப்பர். விருது விழாவின் இறுதிச் சுற்றுக்கு முன்மொழிவு பெற, விருது விழா போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நடவடிக்கைகளில் இவர்கள் கலந்துகொள்வார்கள்.
விருப்ப விருதுகள் (Favourite Awards) என்ற பிரிவினுள் உள்ளடங்கும் விருதுகளுக்கு பொதுமக்கள் இணையம்வழி வாக்களிக்கலாம். ஜீ தமிழ் இணையத்தளம் (www.ztkv.zee5.com) அல்லது ஆசிய ரசிகர்களுக்கான ஜீ தமிழ் ஃபேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/ZeeTamilAPAC) ஆகிய தளங்களை நாடி வாக்குகளைப் பதிவு செய்யலாம்.
இம்மாதம் 17ஆம் தேதி, சிங்கப்பூர் நேரம் மாலை 6.30 மணிக்கு வாக்களிப்புகள் நிறைவுபெறும்.
செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, சத்யா, நீதானே என் பொன்வசந்தம், கோகுலத்தில் சீதை போன்ற மெகா தொடர்களுக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜீன்ஸ், சூப்பர் மாம், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் (reality shows) ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரபலமானது.
2018 ஆம் ஆண்டில் தொடங்கிய ஜீ தமிழ் குடும்பம் விருதுகள், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்போரின் திறமைகளை அங்கீகரிக்க முனையும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
“இந்த காலக்கட்டத்தில் ரசிகர்கள் ஆக்கப்பூர்வமான புத்தாக்கமான படைப்புகளுக்கு ஏங்குகின்றனர். நம் கலைஞர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவதற்கு குடும்ப விருதுகள் ஒரு சிறந்த தளமாக அமைகிறது,” என்றார் ‘ஜீ எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரும் தென் இந்திய தொழில் குழுமத்தின் தலைவருமான திரு சிஜு பிரபாகரன்.