அன்வார் இப்ராகிம் ஆதரவு கூட்டணித் தலைவர்களுடான சந்திப்பை மாமன்னர் ஒத்திவைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தங்களைத் தனித்தனியாக சந்திக்க அரண்மனையில் இருந்து அழைப்பு வந்ததாக எதிர்த்தரப்பு ஜனநாயக செயல் கட்சி தலைமைச் செயலாளர் லிம் குவான் இங்கும் அமானா கட்சியின் தலைவர் முகமது சபுவும் கூறினர். அக்டோபர் 14 (நேற்று), அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் அந்தச் சந்திப்புகள் நிகழவிருந்தன.
ஆனால், தலைநகர் கோலாலம்பூரிலும் சிலாங்கூர் மாநிலத்திலும் புதிய இருவார நடமாட்டக் கட்டுப்பாடு நேற்று முதல் நடப்புக்கு வருவதால் எல்லா சந்திப்புகளையும் மாமன்னர் ஒத்தி வைத்திருப்பதாக அரண்மனையின் மூத்த அதிகாரி அகமது ஃபாடில் ஷம்சுதின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின்னர் சந்திப்புகளுக்கான புதிய தேதி முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது குறித்து தங்களுக்கு அரண்மனை அறிவித்ததாக இரு தலைவர்களும் கூறினர்.
ஆயினும் மாமன்னரைச் சந்திக்க அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது குறித்த அறிவிப்பு தமக்கு வரவில்லை என்றார்.
ஆளும் கூட்டணிக்கு அம்னோ மிரட்டல்
இதற்கிடையே, மலேசிய அரசியலில் மற்றொரு திருப்புமுனையாக ஆளும் கூட்டணியில் சலசலப்பு கிளம்பி உள்ளது.
இதுநாள் வரை பிரதமர் முகைதீன் யாசின் அரசாங்கத்திற்கு பக்கபலமாக தோள்கொடுத்து வரும் அம்னோ தமது ஆதரவை தொடருவது பற்றி ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஆளும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கான ஆதரவை விலக்குவது குறித்து அம்னோ பரிசீலித்து வருவதாக அதன் செய்தித்தொடர்பாளர் அகமது மஸ்லான் தெரிவித்து உள்ளார்.
“முகைதீன் அரசை ஆதரிக்க வேண்டுமெனில் சில நிபந்தனைகளை அம்னோ முன்வைக்கும்.
“அதனை எழுத்துபூர்வமாக ஒப்புக்கொண்டால் அம்னோ ஆதரவு தொடரும்,” என அவர் செவ்வாய்க்கிழமை பின்னேரத்தில் தெரிவித்தார். மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அரண்மனையில் மாமன்னரைச் சந்தித்துவிட்டு திரும்பிய சில மணி நேரங்களில் அம்னோ இந்த அறிவிப்பை வெளியிட்டது.
மேலும், ஆளும் கூட்டணியை ஆதரிப்பதற்குப் பதில், பாஸ் கட்சியுடன் இணைந்து முவாஃபகத் நேஷனல் என்னும் மலாய் சார்பு கூட்டணியைப் பிரபலப்படுத்தவும் அரசியல் கூட்டணியாக அதனைப் பதிவு செய்யவும் அம்னோ ஏற்பாடு செய்யும் என்றும் திரு மஸ்லான் தெரிவித்தார்.
2018 மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியைப் பறிகொடுத்த அம்னோ தற்போதைய அரசாங்கத்தின் தூணாக விளங்கி வருகிறது. அது தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் முகைதீன் அரசு கவிழும் அபாயம் உள்ளது.