சிங்கப்பூர் எங்கும் பல வட்டாரங்களில் கடந்த ஒரு வாரமாக அஞ்சல்பெட்டிகளைச் சேதப்படுத்தி அவற்றில் இருந்த பட்ஜெட் 2020 மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு ஆடவர்களும் மூன்று பெண்களும் அடங்குவர். அவர்கள் 23 வயதுக்கும் 54 வயதுக்கும் உட்பட்டவர்கள். கைதானவர்களிடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலிசார் விசாரணை நடத்துகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மற்ற குடியிருப்பு வட்டாரங்களிலும் நிகழ்ந்திருப்பதாக போலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையை போலிசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
அஞ்சல்பெட்டிகள் அருகில் சந்தேக நபர்களைப் பார்த்தால் உடனடியாக 999 என்ற எண்ணை அழைக்கவும் என போலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பட்ஜெட் 2020 மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதி பெறுபவர்கள் அவற்றைத் தங்கள் அஞ்சல்பெட்டிகளிலிருந்து கூடிய விரைவில் எடுத்துவிடும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.