அஞ்சல்பெட்டிகளை உடைத்து அவற்றில் இருந்த பற்றுச்சீட்டுகளைத் திருடியதன் சந்தேகத்தில் 37 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று வரவுசெலவுத் திட்டம் 2020க்கான மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுகள், தோ பாயோ லோரோங் 7ல் உள்ள குடியிருப்பாளர் புளோக் அஞ்சல்பெட்டிகளிலிருந்து திருடப்பட்டதாக சிங்கப்பூர் போலிஸ் படை தெரிவித்தது. விசாரணையுடன் போலிஸ் கேமராக்களில் பதிவான படங்களையும் கொண்டு குற்றம் புரிந்ததாக நம்பப்படும் மாதை அதே நாளன்று போலிசார் பிடித்தனர்.
தனக்குச் சொந்தம் அல்லாத அஞ்சல்பெட்டிகளிலிருந்து பற்றுச்சீட்டுகளை மாது திருடி இருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் கூறுகின்றன என்று போலிசார் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர்.
இதே போன்ற சம்பவங்கள் வேறு வட்டாரங்களிலும் நடந்துள்ள நிலையில், தங்களின் பற்றுச்சீட்டுகளைச் சீக்கிரமாகப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
லெங்கோக் பாரு, ரெட்ஹில் ரோடு, ரெட்ஹில் குளோஸ் ஆகிய வட்டாரங்களின் 9 புளோக்குகளில் அமைந்துள்ள அஞ்சல்பெட்டிகளும் இதே போன்று வலுக்கட்டாயமாகத் திறக்கப்பட்டதாக சிங்போஸ்ட் நிறுவனம் தனி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
தகவல் அறிந்ததும் உடனே அவசர செயல்பாட்டுக் குழு ஒன்று சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் சில அஞ்சல்பெட்டிகளின் கதவு திறந்தபடி இருந்ததாகவும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒன்பது புளோக்குகளுக்குமான அஞ்சல்காரர் வட்டாரத்தை விட்டுச் சென்ற பிறகு, நாச வேலைகளும் திருட்டும் நடந்திருப்பதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
இதையடுத்து, தங்களின் பற்றுச்சீட்டுகள் திருடப்பட்டுள்ளதாகச் சந்தேகிப்போர், உடனே புகார் அளிக்குமாறு போலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் பற்றுச்சீட்டுக்கான தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்களுக்குச் சேரவேண்டிய பற்றுச்சீட்டுகளைச் செல்லுபடி அற்றதாக்கும்படி தெரிவித்துப் புதிய பற்றுச்சீட்டுகள் அனுப்பக் கோருமாறும் அவர்கள் ஆலோசனை வழங்கினர்.