வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 140,000க்கும் மேற்பட்ட முதலாளி களுக்கு இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து $5.5 பில்லியனுக்கும் அதிகமான வழங்கீட்டுத் தொகை வழங்கப்படும்.
கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாமல் தக்கவைக்க இந்த நிதி வழங்கப்படுகிறது.
ஏறத்தாழ 1.9 மில்லியன் உள்ளூர் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இந்தத் தொகை உதவும் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
இந்த $5.5 பில்லியனுடன் சேர்த்து, வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் $21.5 பில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்படுவதாக நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் தெரிவித்தன.
கடந்த பிப்ரவரி மாதத்தில், முதலாவது வரவுசெலவுத் திட்ட ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தில் வேலை ஆதரவுத் திட்டத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிமுகப்படுத்தினார்.
அதையடுத்து, அடுத்தடுத்த தொகுப்புத் திட்டங்களில் வேலை ஆதரவுத் திட்டம் மேம்படுத்தப்பட்டது. ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் நிரந்தரவாசிக்கும் வழங்கப்படும் சம்பளத்தின் முதல் $4,600க்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும்.
கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை சம்பளம் வழங்க திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. நெருக்கடி
நிலையை நன்கு சமாளித்து வரும் துறைகளின் ஊழியர்களுக்கு, வரும் டிசம்பர் மாதம் வரை வேலை ஆதரவுத் திட்ட நிதி மூலம் சம்பளம் வழங்கப்படும். ஊழியர்களின் கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை ஈடுசெய்ய இம்
மாதம் வழங்கப்படும் தொகை பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் கூறின.
விமானப் போக்குவரத்து, சுற்றுப்பயணம், மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆகிய துறைகளைச் சேர்ந்த முதலாளிகளுக்கு 75 விழுக்காடு ஆதரவு வழங்கப்படும். உணவுச் சேவைகள், சில்லறை வர்த்தகம், கலைகள், பொழுதுபோக்கு, நிலப் போக்குவரத்து, கடல்துறை, கடலோரத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த முதலாளிகளுக்கு 50 விழுக்காடும் மற்ற துறைகளின் முதலாளிகளுக்கு 25 விழுக்காடும் கிடைக்கும்.
கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் முடிவடைந்தும் பணிகளைத் தொடர அனுமதி பெறாத துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்குப் பணிகளைத் தொடர முடியாத காலகட்டத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய 75 விழுக்காடு ஆதரவு வழங்கப்படும். தகுதி பெறும் முதலாளி
களுக்குத் தபால் மூலம் அவர்களது வழங்கீட்டுத் தொகை தெரிவிக்கப்படும். myTax இணையவாசலுக்குச் சென்றும் அவர்கள் தங்கள் வழங்கீட்டுத் தொகையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்தச் சிரமமிக்க காலகட்டத்தில் ஊழியர்களைத் தக்கவைக்க தங்களால் ஆன அனைத்தையும் முதலாளிகள் செய்ய வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தமது ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்டார். வேலைகளுக்குத் தொடர்ந்து முன்னுரிமை தரப்படுவதாகவும் உள்ளூர் ஊழியர்கள், குறிப்பாக நடுத்தர வயதினரை வேலையில் அமர்த்த வளர்ச்சி கண்டு வரும் நிறுவனங்களை ஊக்குவிக்க, வேலை வளர்ச்சி சலுகையை வழங்குவதாகவும் அவர் கூறினார்.