சிங்கப்பூரில் உற்பத்தித்துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் ஊழியரணிக்கு முக்கிய திறன்கள் இருப்பதையும் உறுதி செய்யவும் புதிய பயிற்சித் திட்ட அலுவலகம் ஒன்று அதற்கான வழிமுறையைத் திட்டமிடும்.
மேம்பட்ட உற்பத்தித் திறன் பயிற்சிக் கழகம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
ஜூரோங் புத்தாக்க வட்டார உற்பத்தி மையத்தில் அமையவிருக்கும் இந்தப் பயிற்சிக் கழகம், கடந்த ஆண்டு $420 மில்லியன் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது.
ஊழியர்களுக்கான புதிய பாடங்களை வரைய பள்ளிகள், பயிற்சி வழங்குநர்களுடன் சேர்ந்து பயிற்சிக் கழகம் பணியாற்றும்.
உற்பத்தித்துறைக்குத் தேவைப்படும் எதிர்காலத் திறன்களை அடையாளம் காணும் முயற்சியிலும் கழகம் ஈடுபடும்.
தொழில்துறை உருமாற்ற ஆசிய பசிபிக் மாநாடு ஒன்றில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று இந்தப் பயிற்சிக் கழகத்தைத் தொடங்கி வைத்தார்.
கொவிட்-19 சூழலிலும் இவ்வாண்டின் முதற்பாதியில் உற்பத்தித்துறை ஆண்டு அடிப்படையில் 3.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
சிங்கப்பூர் பொருளியலுக்கு உற்பத்தித்துறை ஏறத்தாழ 20 விழுக்காடு பங்களிக்கிறது. இத்துறையில் கிட்டத்தட்ட 472,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
மேம்பட்ட உற்பத்தித் திறன் பயிற்சிக் கழகத்திற்கு ஏஸ்டார், பொருளியல் வளர்ச்சிக் கழகம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகிய அமைப்புகள் ஆதரவளிக்கும். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பும் பயிற்சிக் கழகத்தின் முயற்சிக்கு கைகொடுக்கின்றன.
ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ 600 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் அந்த வட்டாரம், 95,000க்கும் அதிகமான வேலைகளை வழங்கும் எனத் தெர்விக்கப்படுகிறது.