மாறிவரும் தொழில்நுட்பம், உருமாற்றம் கண்டு வரும் பொருளியல் போன்றவை காரணமாக ‘பிஎம்இ’ எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் துறையைச் சேர்ந்த 40க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதினரே அதிகம் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளதாக தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்து உள்ளார். எனவே அவர்களின் வேலைவாய்ப்பு வளத்தைப் பாதுகாப்பதிலும் புதிய பொருளியலுக்குப் பொருத்தமானவர்களாக அவர்களைத் தயார்ப்படுத்துவதிலும் புதிதாக அமைக்கப்பட உள்ள பணிக்குழு கவனம் செலுத்தும் என்றார் அவர்.
இந்தப் பணிக்குழுவை என்டியுசி உதவி தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் (எஸ்என்இஎஃப்) நிர்வாக இயக்குநர் சிம் கிம் குவான் ஆகியோர் இைணந்து வழிநடத்துவர். தொழிற்சங்கப் பிரிதிநிதிகளோடு பொதுத்துறை, சேவைத்துறை, தொழில்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம்பெற்றிருப்பர். திரு இங் சி மெங்கும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் திரு ராபர்ட் யாப்பும் புதிய பணிக்குழுவில் ஆலோசகர்களாக அங்கம் வகிப்பர்.
தொழிலாளர் ஆராய்ச்சி மாநாடு 2020ல் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்திய திரு இங், இந்த விவரங்களை அறிவித்ததோடு குழு கவனம் செலுத்த இருக்கும் மூன்று முக்கிய அம்சங்களை விவரித்தார்.
வேலைத்திறனை வளர்த்து ஆட்குறைப்பு அபாயத்தைக் குறைப்பது, ஊழியர் அணியில் திறன்களை வளர்க்கவும் தக்கவைக்கவும் முதலாளிகளை ஊக்குவிப்பது, மறுதிறன் பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் பிஎம்இ துறையினருக்கு திறனூட்டுவது போன்றவை அந்த அம்சங்கள்.
ஊழியர் அணியில் நிலவும் முக்கிய கவலைப் போக்குகள், தேவைகள், திறன் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் போன்றவற்றைக் கண்டறிய குவிநோக்கு விவாதங்கள், நிகழ்வுகள், கருத்தெடுப்புகள் முதலானவற்றில் பிஎம்இ பணியாளர்களையும் முதலாளிகளையும் ஈடுபடுத்த பணிக்குழு ஏற்பாடு செய்யும். அடுத்த ஆறு மாதங்களில் இந்த ஈடுபாட்டு நிகழ்வுகளை நடத்த குழு திட்டமிட்டு உள்ளது.
மேலும், பிஎம்இ துறையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கைகளை மறுஆய்வு செய்ய அரசாங்கத்துடன் இணைந்து குழு பணியாற்றும். வருங்கால நிலைமை, வேலைகள், திறன்கள் போன்றவை தொடர்பான உண்மை நிலையை அறிவதற்கான ஆய்வையும் குழு நடத்தும். இந்த நிகழ்வுகள் மூலம் அரசாங்கக் கொள்கைகள் மீதான பரிந்துரைகளையும் சிறப்பான மனிதவள நடைமுறைகளையும் வழங்குவதோடு பிஎம்இ துறையினருக்கு பயிற்சி அளிக்கவும் பணிக்குழு எண்ணுகிறது.
தற்போதைய கொள்ளை நோய் நெருக்கடியில் பிஎம்இ துறையினரே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு பேட்ரிக் டே. சிங்கப்பூர் பொருளியல் தொடர்ந்து குறுகிய வளர்ச்சியையே கண்டு வருவதால் இந்த நிலைமை இன்னும் மோசமடையும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இதுபோன்ற சிரமங்களின் நடுவே பிஎம்இ துறையினர் போதுமான பாதுகாப்பைப் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மேலும், புதிய இயல்பு நிலைமையை திறம்படச் சமாளிக்கத் தேவையான திறன்கள் அவர்களுக்கு அளிக்கப்படுவதையும் நல்ல வேலைகளுக்கான வாய்ப்புகள் தரப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்,” என்றார் திரு டே.