பிரான்சின் நீஸ் நகர தேவாலயத்தில் நடத்தப்பட்ட கத்தி தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் பெண்கள் என்றும் ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டதாகவும் ராய்ட் டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
கொல்லப்பட்ட பெண்மணிகளில் ஒருவர் அந்த தேவாலயத்தின் ஊழியர். அவருக்கு வயது 55. தலை துண்டிக்கப்பட்ட மாது 60 வயதுடையவர். கத்திக்குத்து பட்ட 44 வயது மாது அருகில் இருந்த உணவகத்துக்குத் தப்பியோடினாலும் சற்று நேரத்தில் உயிரிழந்தார்.
மேலும் பலர் காயமடைந்தனர்.
அதனை அடுத்து பிரான்சில் உச்சகட்ட விழிப்புநிலை எச்சரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை பயங்கரவாதம் என நீஸ் நகர மேயர் குறிப்பிட்டார்.
தேவாலயத்தின் உள்ளே அல்லது அருகில் கத்தி தாக்குதல் நடைபெற்றதாகவும் தாக்குதல்காரனை போலிசார் கைது செய்துள்ளதாகவும் நீஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோஸி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
"அல்லாஹூ அக்பர்," என்று கத்திய பிறகு தாக்குதலை அந்த டுனீசிய ஆடவர் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் பிறந்த அந்த ஆடவர், இவ்வாண்டு செப்டம்பர் 20ஆம் தேதி லேம்படுசா எனும் இத்தாலியத் தீவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆடவரின் பெயர் பிராஹிம் ஔசாயி என டுனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஆடவருடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 47 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக இன்று தெரிவிக்கப்பட்டது.
போலிசார் சம்பவ இடத்தை அடைந்த போதும் "அல்லாஹூ அக்பர்," என்று கத்திக்கொண்டிருந்த தாக்குதல்காரனை போலிசார் சுட்டுப் பிடித்தனர். அந்த ஆடவரிடமிருந்து ஒரு சமய புத்தகம், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஒரு கத்தி, பயன்படுத்தப்படாத 2 கத்திகள், 2 கைபேசிகள், போன்றவை கைப்பற்றப்பட்டன.
நேற்று காலை ரயில் மூலம் நகருக்குள் நுழைந்த அந்த ஆடவர், பின்னர் தேவாலயத்துக்குள் நுழைந்ததாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சம்பவம் நடைபெற்றதும் தேவாலயத்தைச் சுற்றிலும் போலிஸ் அதிரடிப் படை குவிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
சம்பவத்தைக் கடுமையாக கண்டித்துள்ள இத்தாலிய பிரதமர், இது ஒரு மோசமான தாக்குதல் என்றும் சுதந்திரத்தையும் அமைதியையும் தற்காக்கும் பொது நோக்கத்தை இதுபோன்ற சம்பவத்தால் குலைத்து விட முடியாது என்றும் தெரிவித்து உள்ளார்.
“பயங்கரவாதம், வெறுப்புணர்வு, வெறித்தனம் ஆகியவற்றைக் காட்டி லும் எங்கள் நம்பிக்கை வலுவானது,” என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், லையான் நகரில் நீண்ட கத்தி வைத்திருந்த 20 வயது ஆப்கானிய ஆடவரை போலிசார் கைது செய்தனர். ஆப்கானின் பாரம்பரிய உடையில் இருந்த அந்த நபர் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
அதேபோல மோன்ட்ஃபேவெட் நகரில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டிய ஒருவரை போலிசார் சுட்டுக் கொன்றனர். அந்த ஆடவரும் "அல்லாஹூ அக்பர்," என்று சத்தமிட்டதாக உள்ளூர் வானொலி தெர்வித்தது.
அண்மையில் பிரான்சின் உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் சேமுவேல் பாத்தியின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தால் எழுந்த பதற்றம் தணி யும் முன்னரே நேற்றைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.