எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்குள் 180 புதிய வேலைகளை உருவாக்க இருக்கிறது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் புதிய மின்னிலக்க முடுக்க மையம்.
பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன் தொடங்கப்படும் இம்மையத்தில் 100 புதிய பட்டதாரிகளுக்குப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும்.
கொவிட்-19 நெருக்கடியில் இருந்து சிங்கப்பூர் நிறுவனங்கள் மீண்டுவரவும் எதிர்காலத்திற்கு ஆயத்தமாகவும் இம்மையம் ஆதரவு அளிக்கும்.
மின்னிலக்க முடுக்க மையத்தை அதிகாரபூர்வமாக நேற்று தொடங்கி வைத்துப் பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், “உள்ளூர் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் திறன் மேம்பாட்டிற்கும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் இம்மையம் மேலும் பங்களிக்கும்,” என்றார்.
இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களைக் கொண்ட திட்டங்களில் ஆழமான கற்றல் அனுபவத்தை பயிற்சியாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் சொன்னார். அவர்கள் ‘எஸ்ஜியுனைடெட்’ பயிற்சித் திட்டங்களின்மூலம் ஒன்பது மாதங்களுக்குப் பயிற்சி பெறுவர்.
அவர்களில் முழு நேரமாகப் பணியாற்ற விரும்புவோரையும் புதிதாக சேர்க்கப்படும் ‘பிஎம்இடி’ எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களையும் சேர்த்து, புதிய மையம் 2024ஆம் ஆண்டிற்குள் 180 ஊழியர்களை வேலையில் அமர்த்த கடப்பாடு கொண்டுள்ளது.
உள்ளூர் மின்னிலக்கத் திறனாளர்களை வளர்த்து, பேண டிசிஎஸ் கொண்டுள்ள நீண்டகால கடப்பாடு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார் அமைச்சர் ஈஸ்வரன். இம்முயற்சியில் மேலும் பங்காளித்துவத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.