நிதித்துறையில் சிங்கப்பூரர்களை மூலாதாரமாகக் கொண்ட ஊழியர்அணியை உருவாக்கி, தக்கவைக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் கூடுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
2021 ஜூன் மாதத்திற்குள் 1,800 புதிய வேலைகளை உருவாக்கவும் 2,000 பயிற்சியிடங்களையும் வழங்க நிதித்துறை திட்டமிட்டு வருகிறது என்று ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்து இருக்கிறார்.
ஆக அதிகமாக நிதித் தொழில்நுட்பத் துறையில் 880 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று நாணய ஆணையமும் ‘ஐபிஎஃப்’ எனும் வங்கியியல், நிதி நிலையமும் இணைந்து நேற்று நடத்திய இணையவழிக் கருத்தரங்கின்போது திரு ரவி மேனன் குறிப்பிட்டார்.
நிதி நிலையங்களில் வேலை அனுபவப் பயிற்சி பெறும் சிங்கப்பூர் பட்டதாரிகளுக்காக புதிய வேலை-கல்வி ஆதரவுத் திட்டத்தை ஆணையம் தொடங்கும். பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகையில் 80 விழுக்காட்டை, அதிகபட்சமாக மாதத்திற்கு 1,000 வெள்ளியை ஆணையம் வழங்கும்.
நிதித்துறை வேலைகளுக்குத் தயார்நிலையில் இருக்கும் பட்டதாரிகளை உருவாக்கவும் அந்தத் துறையில் சிங்கப்பூர் திறனாளர்களை உருவாக்கவும் இப்புதிய திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை-கல்வி பட்டத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தப் புதிய திட்டம்.
நிறுவனத்தின் ஆதரவுடன் கூடிய பயிற்சியாளர்களுக்காக இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு பயிற்சி உதவித் தொகை மானியத்தை ஆணையம் நீட்டிக்க இருக்கிறது.
அதேபோல, வங்கியியல், நிதி நிலையமும் தனது ஐந்து விழுக்காடு கூடுதல் பயிற்சிக் கட்டண உதவித்தொகையை நீட்டிக்கும்.
நிதித்துறையில் உள்ளூர்வாசிகளின் வேலைத் தகுதியை மேம்படுத்தும் பொருட்டு, மேம்படுத்தப்பட்ட பயிற்சி ஆதரவு நடவடிக்கைகளை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கொவிட்-19 நோய்ப் பரவல் காலகட்டத்தில் வேலைகளை உருவாக்குவது என்பது மையப் பொருளியல் சவாலாக உருவெடுத்துள்ளது என்று திரு ரவி மேனன் குறிப்பிட்டார்.
அத்துடன், நல்ல வேலைகளை உருவாக்குவது மிக முக்கியம் என்பதை அரசாங்கம் எப்போதுமே உணர்ந்துள்ளது என்றும் அதனால்தான் ஒவ்வொரு நெருக்கடியின்போதும் வேலைகளைத் தக்கவைக்கவும் சிங்கப்பூரர்களை வேலையில் இருக்கச் செய்யவும் அரசாங்க ஆதரவு நடவடிக்கைகள் கவனம் செலுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் நிதித்துறையில் 170,000க்கும் அதிகமானோர் பணியாற்றி வந்தனர். 2015 முதல் 2019 வரை அத்துறையில் 22,000 வேலைகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் 70% வேலைகள் சிங்கப்பூரர்கள் வசமாகின.
இவ்வாண்டின் முற்பாதியில் நிதித்துறையில் 1,900 வேலைகள் உருவாக்கப்பட்டன என்றும் அவை அனைத்தும் உள்ளூர்வாசிகளைச் சென்று சேர்ந்தன என்றும் திரு ரவி மேனன் தெரிவித்தார்.
தமிழ் முரசு இணையப் பக்கத்தில் 14,000க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புத் தகவல்கள்! மேலும் அறிய: https://www.tamilmurasu.com.sg/jobs