ஜனவரி மாதத்தில் மொத்தம் 2,441 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. பொதுவாக ஜனவரி மாதத்தில் டெங்கி நோய் பரவல் இவ்வளவு அதிகம் இருப்பதில்லை என்றும் இது வழக்கத்தைவிட அதிகம் என்றும் அறிக்கை குறிப்பிட்டது. ஜனவரி 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் 636 டெங்கி பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்திய வாரத்திலும் இதே அளவு டெங்கி பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும் ஜனவரி மாதத்தில் 47 வயது சிங்கப்பூர் ஆடவர் டெங்கி பாதிப்பால் உயிரிழந்தார். மார்சிலிங் ரைசில் வசித்த அவர், ஜனவரி 22ஆம் தேதி மாண்டர்.
எல்நினோவினால் ஜனவரி சற்று வெப்பமாக இருந்தது கொசு இனப் பெருக்கத்துக்கும் டெங்கி நோய் அதிகரிப்புக்கும் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போதைய பருவநிலை கொசு இனப் பெருக்கத்துக்கு சாதகமாக இருப்பதால் நோய் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்களை சுற்றுப்புற வாரியம் கேட்டுள்ளது. டெங்கி குறித்த கடைசி நிலவரங்களை www.dengue.gov.sg என்ற இணையத் தளத்தில் அல்லது myENV செயலி வழி தெரிந்துகொள்ளலாம்.