மலேசியாவில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட விரும்புவோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க இவ்வாண்டு இருமடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட மேலும் அதிகமானோரை ஊக்குவிக்கும் ‘எம்குவிட்’ எனப்படும் இலவசத் திட்டத்தில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை இன்று (நவம்பர் 30) வெளியிடப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, புகைபிடிக்கும் பழக்கமுடைய 3,442 பேர் இணையம் வழியாக இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஆதம் பாபா இன்று மக்களவையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தில் பதிவு செய்திருந்த 1,678 பேரைவிட இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகம் என்பதை அவர் சுட்டினார்.
“இவ்வாண்டு இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களில் 95 விழுக்காட்டினர், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்த காலத்தில்தான் பதிவு செய்தனர்,” என்று டாக்டர் ஆதம் பாபா தெரிவித்தார்.
மலேசியர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட விரும்புவதற்கு கொவிட்-19 சூழல் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.