சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் (என்யுஎஸ்) சேர்ந்த பேராசிரியர் தியோடோர் ஜி. ஹோஃப், பாலியல் முறைகேடு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் அரசியல் நிர்வாகக் கல்வித் துறையில் பணிபுரிந்த பேராசிரியர் ஹோஃப், மாணவர் ஒருவருக்கு பலவிதங்களில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக என்யுஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. அந்த மாணவரின் பாலியனத்தை என்யுஎஸ் குறிப்பிடவில்லை.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் பெயர் குறிப்பிடப்படாத நபரிடமிருந்து தனக்கு புகார் கிடைத்ததாக என்யுஎஸ் தெரிவித்தது. அதையடுத்து உடனடியாக விசாரணை தொடங்கியது.
அந்த மாணவரிடமும் பேராசிரியர் ஹோஃபிடமும் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, என்யுஎஸ் மாணவர் எவருடனும் தொடர்பில் இருக்கக்கூடாது என்ற உத்தரவு செப்டம்பர் 15ஆம் தேதி பேராசிரியர் ஹோஃபுக்கு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பிறகு, 61 வயது அமெரிக்கரான பேராசிரியர் ஹோஃப், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு ஒதுங்கி இருக்குமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அக்டோபர் 7ஆம் தேதி விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்டோபர் 21ஆம் தேதி சம்பந்தப்பட்ட அந்த மாணவர் விசாரிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் என்யுஎஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்த மாணவருடன் இருந்தார்.
இந்நிலையில், கடுமையான மருத்துவப் பிரச்சினைக்காக பேராசிரியர் ஹோஃப் சிகிச்சை பெற வேண்டியிருந்ததால், அவர் மருத்துவ விடுப்பை முடித்த பிறகு நவம்பர் 13ஆம் தேதி விசாரணைக் குழு அவரிடம் விசாரணை நடத்தியது.
நவம்பர் 18ஆம் தேதி விசாரணைக் குழு அதன் விசாரணை அறிக்கையைப் பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்தது. நவம்பர் 27ஆம் தேதி போலிசிடம் என்யுஎஸ் புகார் அளித்தது. அதற்கு முன்னர், சட்ட ரீதியாக தனக்கு இருக்கும் கடமையை முன்னிட்டு தான் புகார் அளிக்க இருப்பதாக அந்த மாணவரிடம் என்யுஎஸ் தெரிவித்தது.
“குற்றங்கள் கடுமையாக இருப்பதால் டிசம்பர் 1ஆம் தேதி பேராசிரியர் ஹோஃப் பணிநீக்கம் செய்யப்பட்டார்,” என்று என்யுஎஸ் இன்று கூறியது.
அந்த மாணவரின் அடையாளத்தைக் காக்க அவர் பற்றிய எந்த விவரத்தையும் கூற என்யுஎஸ் மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த மாணவருக்கு ஆதரவளிக்கப்பட்டு வந்ததாகவும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் என்யுஎஸ் கூறியது.
பல்கலைக்கழகப் பணியாளர்களிடம் உயர்தர நடத்தை வெளிப்படுத்தப்படுவதைத் தான் எதிர்பார்ப்பதாக என்யுஎஸ் நினைவுபடுத்தியது.