அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி நீண்ட நாட்களாகியும் இன்னும் நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு தெளிவான முடிவையும் அறிவிக்காமல் இழுத்தடித்து வருவதால், தனது உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக அவரது ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது தமிழக மக்களால் தொடர்ந்து பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாகி வருகிறது.
இதுவரை அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்றோ, முழுநேர அரசியல் பிரவேசம் குறித்தோ ரஜினி எந்த ஓர் அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அண்மையில் ெசன்னையில் நடந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய ரஜினி, “தனது அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு விரைவில் அறிவிப்பேன்,” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ரசிகர் மன்ற நகரச் செயலர் சத்தியமூர்த்தி தனது டுவிட்டர் பதிவில், “மக்கள் தலைவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற சூழ்நிலை நிலவுகிறது. அறிவிப்பு வரவில்லை என்றால் உயிரை விடுவேன். என்றும் மக்கள் தலைவர் வழியில்,” எனப் பதிவிட்டிருந்தார்.
அதன்பின்னர், சில மணி நேரத்தில், “அனைவரும் மன்னிக்க வேண்டும். மன உளைச்சலால் இப்படி ஒரு பதிவைப் போட்டுவிட்டேன். தஞ்சை மாவட்டத் தலைவர் என்னிடம் பேசி, ‘தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். களப்பணி செய்தவருக்குத் தான் அந்த வலி தெரியும்,” எனப் பதிவிட்டு இருந்தார்.
இதற்கிடையே, “ரஜினியுடனான என் போட்டி அரசியலிலும் தொட ரும். நாங்கள் திரைத்துறையில் போட்டியாளர்களாக மட்டுமே இருந்தோம்; பொறாமையாளர்களாக இருந்ததில்லை. அது, அரசியலிலும் தொடரும்,’’ என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கூறியுள்ளார்.