சிங்கப்பூரில் வேலை அனுமதிச்சீட்டு ஊழியர் யாரும் வேறு வழியின்றி சாலைகளில் தூங்கியதில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் தங்க இடமில்லாமல் தவிக்கும் மலேசிய ஊழியர்கள் தொடர்பில் ஊடகத்தில் வெளியான பல்வேறு செய்திகளை அமைச்சு மறுத்துள்ளது.
மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித் தாளில் நவம்பர் 22ஆம் தேதி ‘சிங்கப்பூரில் தங்க இட மில்லா மலேசியர்கள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரில் அறையை அல்லது படுக்கையை வாடகைக்கு எடுத்து தங்க வழியில்லாத 100 பேருக்கும் அதிகமான மலேசியர்கள் இருக்கிறார்கள் என்று அந்தச் செய்தியில் பேட்டி காணப்பட்ட ஒருவர் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்படி சிரமப்படும் மலேசியர்களுக்கு உதவலாம் என்ற நோக்கத்துடன் ஷாருதீன் ஹியல் ஹெல்மி முகம்மது நூர் என்ற பேட்டி அளித்த ஆடவருடன் நவம்பர் 23 மற்றும் 27ஆம் தேதிகளில் தான் தொடர்புகொண்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
ஆனால் அத்தகைய மலேசியர் யாரோடும் தான் நேரடியாக தொடர்பு கொண்டதில்லை என்றும் உண்மையிலேயே அவர்கள் தங்க இடமின்றி தவிக்கிறார்களா என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்த ஆடவர் தெரிவித்தாகவும் அமைச்சு தெரிவித்தது.