மலேசியாவில் கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, சரவாக் தவிர மற்ற பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடு தொடரும் என மலேசிய அரசு இன்று (ஜனவரி 19) அறிவித்தது.
வரும் வெள்ளிக்கிழமை முதல் கெடா, பேராக், நெகிரி செம்பிலான், பாகாங், திரங்கானு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வரும்.
சுகாதார அமைச்சின் அறிவுரைப்படி, இந்த மாநிலங்களில் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார்.
மலேசியாவில் கடந்த ஆறு நாட்களாக 3,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 3,631 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது; 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
மலேசியாவில் இதுவரை 165,371 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, 619 பேர் உயிரிழந்தனர்.
அங்கு இப்போது 39,464 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.