வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை சந்தை இந்த ஆண்டு தொடக்கம் முதலே வலுவாக இருக்கிறது. தொடர்ந்து ஏழாவது மாதமாக ஜனவரியில் மறுவிற்பனை வீட்டு விலை கூடியது.
2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில் சென்ற மாதம் மறுவிற்பனை வீடுகளின் விலைகள் 1.7 விழுக்காடு கூடி இருக்கின்றன. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த விலை உயர்வு 7.7 விழுக்காடாக இருக்கிறது.
ஜனவரியில் குறைந்தபட்சம் $1 மில்லியனுக்கும் அதிக தொகை கொடுத்து மொத்தம் 13 வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்கிக்கொள்ளப்பட்டன.
பீஷான் ஸ்திரீட் 24ல் உள்ள நட்டுரா லாஃப்ட் என்ற குடியிருப்பில் உள்ள ஐந்தறை வீடுதான் ஆக அதிகமாக $1.21 மில்லியன் விலைக்குக் கைமாறியது.
ஜனவரியில் மொத்தம் 2,501 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. இது 2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 0.5 விழுக்காடு அதிகம். 2020 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் 30.3 விழுக்காடு அதிகமான வீடுகள் விற்கப்பட்டு உள்ளன. இந்த விவரங்கள் எஸ்ஆர்எக்ஸ் சொத்துச்சந்தை இணைய வாசல் மூலம் தெரியவருகின்றன.
அரசாங்க வீடுகளுக்கு தொடர்ந்து அதிக தேவை இருந்து வருகிறது. இதன் காரணமாக விலைகள் ஏற்றம் கண்டன. வரும் மாதங்களில் விலைகள் 2 முதல் 5 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நான்கு அறை வீடுகள்தான் அதிகம் கைமாறின. அதற்கு அடுத்த நிலையில் ஐந்தறை வீடுகள் விற்பனையாயின.
தொடர்ந்து எட்டாவது மாதமாக, மாதாமாதம் 2,300க்கும் அதிக வீடுகள் விற்பனையாகி வருகின்றன. வீவக மறுவிற்பனை வீடுகள் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் அதிகமாக விற்பனையாயின.
விலைகள் 5 விழுக்காடு கூடின. சென்ற ஆண்டில் விற்கப்பட்ட வீவக மறுவிற்பனை வீடுகளில் சுமார் 26 விழுக்காட்டு வீடுகளுக்கு 91 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிக குத்தகைக் காலம் எஞ்சி இருந்தன.