அன்றாடம் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்கள் புதிய உச்சத்தைத் தொட்டன
இந்தியாவிலும் தாய்லாந்திலும் கொவிட்-19 கிருமிப் பரவல் நிலவரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இரண்டாம் கட்ட கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் நேற்றுக் காலை வரையிலான 24 மணி நேரத்தில் 152,879 தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. அங்கு ஒரேநாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.
மேலும் 24 மணி நேரத்தில் 839 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டதாக இந்திய சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் கூறியது. ஐந்து மாதங்களில், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு அங்கு பதிவாகி இருக்கும் ஆக அதிக மரண எண்ணிக்கை இது.
புதிய மரணங்களையும் சேர்த்து அங்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 169,275 ஆக அதிகரித்தது. கிருமித்தொற்று சம்பவங்களின் அடிப்படையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த மூன்றாம் நிலையில் இந்தியா உள்ளது.
புதிதாக நேற்று அறிவிக்கப்பட்டவர்களையும் சேர்த்து அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.35 மில்லியனைக் கடந்துவிட்டது.
இந்தியாவில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
தொற்று எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் மகா ராஷ்டிர மாநிலத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் முடக்கம் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மும்பை நகரில் வாகனப் போக்குவரத்து நேற்று அடியோடு முடங்கியது.
தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1.1 மில்லியனாக உயர்ந்துவிட்டது. அதாவது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 8.29 விழுக்காட்டினர் சிகிச்சையில் உள்ளனர். அதன் காரணமாக தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்புவோரின் விகிதம் 90.44 விழுக்காட்டுக்குக் குறைந்துவிட்டது.
இந்நிலையில் தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில் நேற்று புதிதாக 967 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் ஒரே நாளில் பதிவாகி இருக்கும் ஆக அதிக எண்ணிக்கை இது. அங்கு மூன்றாம் கட்டமாக கிருமித்தொற்று பரவி வருகிறது. புதியவர்களையும் சேர்த்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,625 ஆக அதிகரித்துவிட்டது.
இருந்தபோதிலும் மரண எண்ணிக்கை 100க்கும் கீழ் 97 என்ற அளவில் நீடிப்பதாக தாய்லாந்தின் கொவிட்-19 தகவல் நிலையம் கூறி யது. பெருகி வரும் நோயாளிகளைச் சமாளிக்க தலைநகர் பேங்காக்கில் 10,000 படுக்கைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட உள்ளதாக தாய்லாந்து மருத்துவ சேவைத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சுக்சன் கிட்டிசுபாகோர்ன் கூறினார்.