பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த இணையக் கருத்தரங்கில் நிபுணர்கள் கலந்துரையாடல்
சிங்கப்பூரிலும் அதைச் சுற்றியும் நீர்மட்டம் உயர பருவநிலை மாற்றம் காரணமாக அமைகிறது. கடந்த சனிக்கிழமை தீவின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பருவநிலை மாற்றத்தின் ஓர் அறிகுறியாக இருந்தது.
வடிகால் திட்டத்தைச் சோதிக்கும் அளவுக்கு அடிக்கடி கனமழை பெய்வதற்கு பருவநிலை மாற்றம் காரணமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், கடல் நீர்மட்டத்தையும் அது உயர்த்துகிறது.
தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அது ஒரு மிரட்டலாக விளங்குகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் நேற்று ஏற்பாடு செய்த கடல்நீர் மட்ட உயர்வு குறித்த இணையக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய நிபுணர்கள் மேற்கண்ட கருத்தை முன்வைத்தனர்.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற மூன்று நிபுணர்களில் ஒருவர் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கரையோரப் பாதுகாப்புத் துறை இயக்குநரான திருமதி ஹேஸல் கூ. சிங்கப்பூரின் 30 விழுக்காடு அளவு, சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து 5 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் அமைந்துள்ளதை அவர் சுட்டினார்.
இன்று பூமி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில் பேசிய திருமதி கூ, "கடல் நீர்மட்ட உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு நிச்சயமாக மோசமானதாக இருக்கும். எனவே, அத்தகைய நிலை ஏற்படுவதைத் தவிர்க்க இப்போதே செயல் நடவடிக்கை தேவை," என்று வலியுறுத்தினார்.
வெள்ள பாதிப்பை முழுமையாக எதிர்கொள்ள பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் பங்கையாற்றி வருகிறது. நாட்டில் உயர்ந்துவரும் கடல் நீர்மட்டமும் அடிக்கடி பெய்துவரும் கனமழையும் ஏற்படுத்தும் இரட்டை பாதிப்பைக் கழகம் ஆராய்ந்து வருவதாக திருமதி கூ சொன்னார்.
கடந்த சனிக்கிழமை பெய்த கனமழை குறித்தும் அவர் பேசினார். பொதுவாக ஏப்ரல் மாதம் முழுவதும் பெய்யும் சராசரி மழையில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான அளவு கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் ஒரு சில மணிநேரத்திலேயே பெய்துவிட்டதாக திருமதி கூ தெரிவித்தார்.
"இதுபோன்ற கனமழை அடிக்கடி பெய்யும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்," என்றார் அவர்.
சிங்கப்பூரின் கரையோரப் பகுதிகளுக்குப் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பை ஆராய உதவும் மாதிரிப் படிவம் ஒன்றை உருவாக்க சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடனும் 'ஹைட்ரோஇன்ஃபர்மேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட்' நிறுவனத்துடனும் இணைந்து பொதுப் பயனீட்டுக் கழகம் பணியாற்றி வருகிறது.
'ஸூம்' தளத்தில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் யூடியூப் ஒளிவழியில் நேற்று மாலை பதிவேற்றம் செய்யப்பட்டது.
கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இந்த வட்டாரத்தில் உள்ள உயிரினங்கள் வாழும் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸெங் யிவென் கூறினார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிராக மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உயிரினங்களின் வசிப்பிடங்கள் உதவுகின்றன.
அத்தகைய வசிப்பிடங்களுக்கு இல்லமாக தென்கிழக்காசியா உள்ளது.