ஆர்த்தி சிவராஜன்
உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் ஆண்களை விட முறையான கல்வியைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், பெண்களின் சொந்த அறிவு, திறன்கள் மற்றும் சாதனைகள் பெரும்பாலும் அங்கீ கரிக்கப்படாமல் போகின்றன.
பெண்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உயர்த்துவதற்கும் எவ்வாறு முயற்சி செய்யலாம் என்பது குறித்து சிங்கப்பூர் சாரணியர் படை இணையம் வழி ஓர் உரையாடலை கடந்த மாதம் 8ஆம் தேதி நடத்தியது.
இந்த உரையாடலில் கலந்துகொண்ட சாரணியர் மற்றும் இளஞ்சாரணியர்களின் தந்தையர், தங்கள் மகள்களுக்கு சமமான பாலினச் சூழலை எவ்வாறு உருவாக்கத் தர முடியும் என்பது பற்றிய கருத்துகளைப் பகிர்ந்தனர்.
வீட்டில் ஆண்களும் பெண்களும் எவ்வித பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பற்றிய எண்ணங்களை மாற்ற கல்வி மிக அவசியம் என சில தந்தையர்கூறினர்.
உதாரணத்திற்கு, தாய்மார்கள் இல்லத்தரசிகளாகவும், தந்தைகள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. இதை மாற்ற வேண்டும் என தந்தையர் கலந்துரையாடினர்.
இளம் வயதிலேயே தங்கள் மகள்களுக்கு எவ்வாறு வழிகாட்டுவது என்பதைப் பற்றி பேசும்போது, வெவ்வேறு வாழ்க்கை தருணங்களில் பெண்களின் மாற்றங்களை ஆதரிக்கும் வகையில் கூடுதல் வளங்கள் வேண்டும் என பகிர்ந்தனர்.
பெண்களை மரியாதையுடன் நடத்த தந்தைகள் தங்கள் மகன்களுக்கு கற்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் இந்த உரையாடலில் இடம்பெற்றது.
இந்த இணைய உரையாடலில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் இரண்டாம் சட்ட அமைச்சருமான திரு எட்வின் டோங்.
"நான் மூன்று மகள்களின் தந்தையாக இருப்பதால், மற்ற தந்தைகள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் என்னுள் ஆழமாகப் பதிந்தன.
"நம் மகள்கள் இந்த உலகத்தை எவ்வாறு பார்க்கிறார்கள், எவ்வாறு ஆண்களுடன் பழகுகிறார்கள், எவ்வாறு மற்றவர்களால் நடத்தபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஆகியவற்றை வடிவமைப்பதில் தந்தைகளாகிய நாம் ஒரு முக்கிய பங்காற்றுகிறோம். நாம் அவர்களின் முதல் மற்றும் சிறந்த முன்மாதிரிகள்," எனக் கூறினார்.
பெண்களாகிய நாம், உலகத்திலும் சமுதாயத்திலும் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை பற்றி பேசலாம். ஆனால், இந்த எதிர்பார்ப்புகளை உண்மையாக்க பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் அவர்களின் பங்கை செய்ய வேண்டும். கைகளைத் தட்ட இரு கைகள் தேவை. அதேபோல், தந்தையர்கள் தான் மற்ற கை," என்றார் சிங்கப்பூர் சாரணியர் படையின் தலைவர் முனைவர் சீதா சுப்பையா.