மூழ்கிய கப்பல்கள் இரண்டின் சிதைவுகள் சிங்கப்பூர் நீரிணையில் கண்டுபிடிக்கப்பட்டன. சிங்கப்பூரில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பலநூற்றாண்டு பழமைவாய்ந்த கப்பல் சிதைவுகள் இவை. சிங்கப்பூரின் கடல்துறை மரபுடைமையில் மைல்கல் சாதனையாக இந்தக் கண்டுபிடிப்பு விளங்குகிறது. சீன கைவினைப் பொருட்களை இக்கப்பல்கள் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இவற்றின் சிதைவுகள், பாறைகள் நிறைந்த ஆழமில்லா நீர்ப்பகுதியில் உள்ள பெட்ரா பிரங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒரு கப்பலின் சிதைவை ஆராய்ந்ததில், இந்தியாவில் கட்டப்பட்ட 'ஷா முன்ஷா' பயணக் கப்பல் அது என்று கண்டறியப்பட்டுள்ளது. 1796ல் சீனாவின் குவாங்டோங் நகரிலிருந்து இந்தியாவின் அப்போதைய பம்பாய் நகருக்குச் சென்றுகொண்டிருந்த அந்தக் கப்பல் மூழ்கியது.
இந்தக் கப்பல் பெட்ரா பிரங்கா தீவின் கிழக்கே 300 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் இந்திய இதிகாசங்களில் குறிப்பிடப்படும் 'மகரம்' என்ற மீனின் வடிவம் கொண்ட சுட்டாங்கல் (ceramic) சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் 'மெர்லயன்' சின்னத்தை வடிவமைத்தவர் மகரத்தைக் கண்டுதான் அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று கடல்துறை தொல்பொருள் ஆய்வாளர் மைக்கல் ஃபிளெக்கர் தெரிவித்தார்.
இது உட்பட சிதைவுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் இவ்வாண்டின் இறுதி முதல் சிங்கப்பூரின் அரும்பொருளகங்களில் காட்சிக்கு வைக்கப்படும். இரண்டு கப்பல் சிதைவுகளிலிருந்து பொருட்களை மீட்கும் பணியை மேற்பார்வையிட்ட திரு ஃபிளெக்கர், முதல் சிதைவின் கண்டுபிடிப்பு அற்புதமானது என்றார். அந்தச் சிதைவு, 1300 முதல் 1600 ஆண்டுகள் வரை தெமாசெக் என்ற பெயரைக் கொண்டிருந்த பழங்காலத்து சிங்கப்பூரைச் சேர்ந்தது.
மற்றொரு மீட்புத் திட்டத்தில் 2015ஆம் ஆண்டு ஈடுபட்டிருந்த முக்குளிப்பாளர்கள் சிலர், சில சுட்டாங்கல் தட்டுகளைக் கண்டுபிடித்ததை அடுத்து அவற்றை 'ஐசீஸ்-யூசோஃப் இஷாக்' ஆய்வுக் கழகத்திடம் ஒப்படைத்தனர். அந்தத் தட்டுகள் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று ஆய்வுக் கழகம் கூறியது.
இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து அக்கடற்பகுதியில் அகழாய்வுத் திட்டம் 2016ஆம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தத் திட்டம் தற்போது ஆறாவது ஆண்டாக நடந்து வருகிறது.
தீவின் வடமேற்கு திசை பக்கம் அந்தச் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய மரபுடைமை நிலையமும் 'ஐசீஸ்-யூசோப் இஷாக்' ஆய்வுக் கழகமும் நேற்று அறிவித்தன. இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் பெட்ரா பிரங்கா தீவுக்கு அருகே செய்யப்பட்ட ஒரு சோதனையில் இரண்டாவது சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.
'மகரம்' சிற்பம் தொடர்பில்...
"தென்கிழக்காசிய சிற்பம் மகரம். இந்தியாவில் 'மகரம்' என்பது மீன் போன்ற வடிவத்தில் சித்திரிக்கப்படுகிறது. சீனாவிலோ மகரத்தின் தலை, கடல்நாகத்தின் தலை போல இருக்கும். ஷா முன்ஷா கப்பல் சிதைவுகளில் கிடைத்த மகரம் மீது சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற எண்ணெய் சாயம் பூசப்பட்டுள்ளது. இந்த வண்ணங்கள் தேய்ந்த நிலையில் உள்ளன. இந்தப் பொருள் இந்தியச் சந்தைக்காக செய்யப்பட்டிருக்கக்கூடும்," என்று டாக்டர் ஃபிளெக்கர் தெரிவித்தார்.
சீனாவில் செய்யப்பட்ட மகரச் சிற்பத்திற்கு 300 ஆண்டுகள் முன்னரே இந்தியர்களிடையே வரவேற்பு இருந்தது இதில் தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்தி: கி. ஜனார்த்தனன்