கி. ஜனார்த்தனன்
தம் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பின்னர் பிள்ளைகளுக்குக் கூறி வாழ்க்கைச் சவால்களுக்கு அவர்களைத் தயார்செய்வதே ஒரு தந்தையின் கடமை என்கிறார் திரு பாலன் கோபால், 49. பிள்ளைகளின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்து, அவர்கள் கூறுவதைக் காதுகொடுத்து கேட்டு, அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு நல்ல தந்தையாக இருக்க முற்படுகிறார் இவர்.
உடலுறுதிப் பயிற்றுவிப்பாளராகவும் பயிலரங்கு நடத்துநராகவும் உள்ள திரு பாலன், இரண்டு மகன்களுக்குத் தந்தை. குடும்ப நலனை ஊக்குவிக்கும் 'ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்' (Families For Life) அமைப்பில் தொண்டூழியராக இருக்கிறார். சுய முன்னேற்றம் தொடர்பிலும் நல்ல பெற்றோராக இருப்பது தொடர்பிலும் இவர் தம் வகுப்புகளில் கற்றுத்தருகிறார். தம்மைப் போன்ற ஒரே சிந்தனையுடையவர்களைச் சந்திப்பது மனித நூலகத்திற்குச் செல்வது போன்றது என்று கூறினார் திரு பாலன். இத்தகைய குழுக்களால் சமூகத்தில் சிறந்த தந்தையர் உருவாகுவதாகக் கூறினார்.
"நான் என் பிள்ளைகளுக்குச் சிறு தகவல்களைக் கூறினாலோ சிறு வேலைகளைச் செய்ய சொன்னாலோ ஏதேனும் ஒரு படிப்பினையை அதில் இணைக்கப் பார்ப்பேன்," என்று அவர் கூறினார்.
திரு பாலனின் இரு புதல்வர்களில் மூத்தவரின் வயது 17, இளையவருக்கு 14 வயது. பிள்ளைகளின் மீள்திறனை வளர்ப்பதற்காக அவர்களுடன் திரு பாலன் உடற்பயிற்சியில் ஈடுபடுவார். அத்துடன், குடும்பமாகத் தியானத்தில் ஈடுபடுவர்.
சிறு வயதாக இருந்தபோது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் வளர்ந்தவர் இவர். ஆனால் அதற்குப் பதிலாக பிள்ளைகள் தங்களது உணர்ச்சிகளைச் சரியான முறையில் கையாண்டு அவற்றை வெளிப்படுத்துவது முக்கியம் எனக் கூறினார்.