சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இயங்கும் எல்லா சிங்கப்பூர் விமான நிலைய முனையங்களிலும் சேட்ஸ் நிறுவன பயணிச் சேவை அதிகாரியான 47 வயது திருமதி அ.சீதாலட்சுமி பணி செய்துள்ளார்.
கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டுவரும் திருமதி சீதா சிங்கப்பூரிலிருந்து வெளிநாட்டுக்கு திரும்பும் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்பவர்.
சக்கர நாற்காலி தேவைப்படும் பயணிகளுக்கு அதற்குரிய ஏற்பாடுகள் செய்வது, பயணிகளுக்கு 'செக் இன்' சேவை வழங்குவது உள்ளிட்டவை இவரது பணிகள்.
கிருமிப் பரவலுக்கு முன் பர பரப்பான வேலைச் சூழலிலிருந்த அவருக்கு தற்போது குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் வருவது சங்கடத்தைத் தருகிறது.
இச்சூழலில் அதிக கவனத்து டன் 'செக் இன்' முறையை இவர் கையாள வேண்டும். ஏனெனில் வெவ்வேறு நாடுகளில் கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருப்பதால், உரிய படிவங்கள் (உதாரணத்திற்கு கொவிட்-19 பரிசோதனை முடிவு) அவர்களிடத்தில் இருப்பதை இவர் உறுதிசெய்ய உதவுகிறார்.
பயணிகள் போகும் நாட்டுக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பப்படுவதை அது தடுக்கும்.
டெல்டா ரக கிருமித்தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்குரிய பாதுகாப்பு சாதனங்களையும் அணிந்து திருமதி சீதா முனையம் மூன்றில் பணிகளை மேற்கொள்கிறார்.
சில குறிப்பிட்ட இடங்களில் 'என்95' ரக முகக்கவசத்தை அணிய வேண்டும்.
பயணிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் கிருமித்தொற்று அவரையும் தாக்க வாய்ப்புண்டு. ஆனால் அஞ்சிட அவசியமில்லை என்றார் திருமதி சீதா.
"தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும் தொடர்ந்து எங்களிடம் தெரிவிக்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றுவதாலும் தைரியத்துடன் பணியில் ஈடுபடுகிறோம்," என்றார் அவர்.
"விமான நிலையத்தில் பயணிச் சேவை அதிகாரிகள் இல்லாத பட்சத்தில் தற்போது அன்புக்குரியவர்களை உடனே சந்திக்க விரும்பும் பயணிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகலாம். செக்-இன் அனுபவத்தை சுமுகமாக முடித்துத் தந்து, தாங்கள் பயணம் செல்லும் நாடுகளில் அவர்களுக்கு அனுமதி கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தி அவர்கள் விரைவில் குடும்பத்தினரோடு இணைய கடப்பாடு கொண்டுள்ளோம்," என்றார் அவர்.
கட்டுப்பாடுகள் படிபடியாக தளர்த்தப்பட்டு நண்பர்களுடனான சந்திப்புகளை மீண்டும் தொடங்கவும் அன்புகுரியவர்களுடன் சேர்ந்து வெளிநாடு செல்லவும் இவர் ஆவலுடன் காத்திருக்கிறார்.