ஜம்மு: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களில் ஒருவர் ஆறு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். கடந்த 3ஆம் தேதி ஏற்பட்ட பனிச் சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் அனைவரும் புதையுண்டு இறந்ததாகக் கருதப்பட்டது. எனினும் இந்திய ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டது. இதில் ஒருவர் மட்டுமே சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் பனியில் புதையுண்டு ஆறு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஒரு வீரர் மட்டும் உயிருடன் மீட்கப் பட்டுள்ளார். சுமார் 25 அடி ஆழத்துக்கு கீழ் புதையுண்டு கிடந்த அவரை ராணுவ மீட்புக் குழு மீட்டுள்ளது. மற்ற வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பா என்ற அந்த வீரர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு, அங்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார். அவரை சந்திப்பதற்கு முன்னதாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவை காணச் செல்கிறேன். தேச மக்களின் பிரார்த்தனைகளை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
சியாச்சினில் மீட்கப்பட்ட வீரரின் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரித்து அறிகிறார் பிரதமர் மோடி. படம்: ஊடகம்