சிங்கப்பூர், 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள முதியவர்கள், நோய் தடுப்பாற்றல் மிகவும் குறைவாக இருப்போர், மூத்தோர் பராமரிப்பு வசதிகளில் தங்கி யிருப்போர் உள்ளிட்ட சில குறிப்பிட்டோருக்கு இந்த மாதத்திலிருந்து பூஸ்டர் தடுப்பூசிகளைப் போடத் தொடங்கும்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நடைபெற்ற கொவிட்-19 கிருமிக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்தார்.
தொற்று, கடும் நோய் பாதிப்பு போன்றவற்றிலிருந்து மூத்தோர் அதிகப் பாதுகாப்பைப் பெறவும் தொற்றுப்பரவல் வெகுவாக உயர்ந்து அதிகமானோர் கடும் நோய் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்கவும் 'பூஸ்டர்' தடுப்பூசிகள் போடப்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குள் மூத்தோருக்கு 'எம்ஆர்என்ஏ' வகைத் தடுப்பூசி களின் 'பூஸ்டர்' தடுப்பூசிகளை மூத்தோர் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அது கூறியது.
அதன்படி, இவ்வாண்டு மார்ச் மாத வாக்கில் இரண்டு தடுப்பூசி களையும் போட்டுக்கொண்ட 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள மூத்தோர், மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள இம்மாதப் பிற்பகுதியில் தகுதி பெறுவார்கள் என்றது அமைச்சு.
புற்றுநோய் சிகிச்சை பெறுபவர் கள், உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், கடைசி கட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட நோய் தடுப்பாற்றல் மிகவும் குறைந்தவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட இரண்டு மாதங்களில், ஏற்கெனவே பெற்ற அதே 'எம்ஆர்என்ஏ' வகை தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று அமைச்சு கூறியது. இது, இவர்களுக்கு தொடக்கத்திலேயே தடுப்பாற்றல் போதிய அளவு செயல்படுவதை உறுதிசெய்யும் என்று சுகாதார அமைச்சு விளக்கியது.
கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பான நிபுணர் குழு இப்பரிந்துரைகளை முன்வைத்தது.
'பூஸ்டர்' தடுப்பூசிகள் குறித்த உலகளாவியத் தரவுகளை குறிப்பாக தடுப்பூசிகளின் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகள் செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.
'பூஸ்டர்' தடுப்பூசித் திட்டத்தை சிலருக்குத் தொடங்கவேண்டும் என்ற பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதாக அமைச்சு கூறியது. மூத்தோருக்கு கடும் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் முன்கூட்டியே இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதால் அவர்களுடைய நோய் தடுப்பாற்றல் குறையலாம் என்றும் அது குறிப்பிட்டது.
'கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் படாது' - 2ம் பக்கத்தில்