நிலைமையை விளக்கி தடுப்பூசி போட்டுக்கொண்ட கொவிட்-19 நோயாளிகளுக்கு அமைச்சர் வலியுறுத்து
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் வயதினர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானால் வீட்டிலேயே தங்கியிருந்து குணமடைய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவுரை கூறி இருக்கிறார்.
மருத்துவமனைகளுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
"நம் மருத்துவமனைகளுக்கும் சுகாதார பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கும் சுமை அளவுக்கு அதிகமாக கூடக் கூடாது. இதுவே சுகாதார அமைச்சின் இப்போதைய ஆகப் பெரிய சவால்.
"இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க ஆன அனைத்தையும் செய்து வருகிறோம்," என்று அவர் ஃபேஸ்புக்கில் நேற்று குறிப்பிட்டார்.
"இதனால்தான் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் வயதினர், வீட்டிலேயே சிகிச்சை பெற்று குணமடைய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள்," என்றார் அவர்.
லேசான அறிகுறிகளுடன் கூடியவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக தனியார் மருத்துவர்களைப் பார்க்கலாம் அல்லது பரிசோதனை மருந்தகங்களை நாடலாம் என்றார் அவர்.
சில பொது மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. லேசான சுவாசத் தொற்று அறிகுறிகளுடன் அவர்கள் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு விரைந்து இருக்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
அதற்கு அடுத்த நாளன்று அமைச்சர் இவ்வாறு கருத்து கூறி இருக்கிறார்.
அத்தகைய மருத்துவமனைகளின் பெயர்களை அமைச்சு குறிப்பிடவில்லை என்றாலும்கூட சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவை தங்கள் நிலை மையை விளக்கி அண்மையில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பதிவேற்றி இருந்தன.
அவசர சிகிச்சைப் பிரிவில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்ததாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவை கூறின.
கொவிட்-19 நோயாளிகளைச் சமாளிக்கும் அளவிற்கு மருத்துவமனை வளம் இருக்குமா என்பதே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கியமான அளவீடு என்று திரு ஓங்கும் அவர் தலைமை வகிக்கும் சிறப்புப் பணிக்குழுவும் திரும்பத் திரும்பக் கூறி வந்துள்ளன என்பது முக்கியமானது.
அமைச்சர், சுகாதார அமைச்சின் தகவல் ஒன்றையும் நேற்று தமது ஃபேஸ்புக் செய்தியில் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 கிருமி தொற்றிய ஒருவருக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள், அவரின் வயதையும் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறாரா என்பதையுமே பெரும்பாலும் சார்ந்திருக்கும் என்று அந்தத் தகவல் தெரிவித்தது.
மே மாதம் 1ஆம் தேதி முதல் சென்ற வியாழக்கிழமை வரை கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் 98 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்களிடம் அறிகுறிகள் அறவே இல்லை அல்லது லேசான அறிகுறிகளே காணப்பட்டன.
அவர்கள் முற்றிலும் குணமடையும் வரை தொடர்ந்து அதே நிலையே நீடிக்கும் என்பதால் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் வயதினர் வீட்டிலிருந்தே முறையான சிகிச்சை பெற்று குணமடைய வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.