பாசிர் பாஞ்சாங் மொத்த விநியோக நிலையம் நாளை (செப்டம்பர் 27ஆம் தேதி) முதல் புதன்கிழமை வரை மூடியிருக்கும். அங்குள்ள ஊழியர்கள் சிலருக்கு கொவிட்-19 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்நிலையம் மூடப்பட்டு சுத்தம் செய்யப்படும்.
இந்தத் தற்காலிக மூடலால் சிங்கப்பூரின் பழ, காய்கறி விநியோகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரின் 30 விழுக்காடு பழ இறக்குமதிகளையும் 50 விழுக்காடு காய்கறி இறக்குமதிகளையும் இந்த நிலையம் கையாள்வதாக சிங்கப்பூரின் உணவு நிறுவனம் தெரிவித்தது.
ஆயினும், ஈரச்சந்தையிலுள்ள பழ, காய்கறிக்கடைகள் திங்கட்கிழமைகளில் மூடி இருப்பதால் இந்த பாதிப்பு குறுகிய காலத்திற்குத்தான் என்றது தேசிய சுற்றுப்புற அமைப்பு.
இந்த நிலையம் வியாழனன்று மீண்டும் திறக்கும்.
இந்தக் காலக்கட்டத்தில் பொதுமக்கள் விரைந்து அளவுக்கு அதிகமாக பழங்களையும் காய்கறிகளையும் வாங்க வேண்டாம் என நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
“உங்களுக்குத் தேவையானதை மட்டும் வாங்குங்கள். அனைவருக்கும் வாங்குவதற்குப் பொருட்கள் இருக்கவேண்டும்,” என்றார் திருவாட்டி ஃபூ. பாதிக்கப்பட்டவர்களுடன் அதிகாரிகள் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.