அண்மையில் உடற்பயிற்சிக் கூடத்தில் 100 கிலோ எடையை மூன்று முறை தூக்கி அதனை வீடியோவில் படம்பிடித்து இணையத் தளத்தில் வெளியிட்டு இருந்தார் சமந்தா. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. "சமந்தாவின் எடையே 50 கிலோதான். அவரால் எப்படி 100 கிலோ எடையைத் தூக்கமுடிந்தது," என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வியந்தனர். இதுகுறித்து சமந்தாவிடம் கேட்டபோது, "பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும்," என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். "நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்.
வாழ்க்கையில் இந்த அளவுக்கு உயர்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த வளர்ச்சிக்கு நான் காரணம் இல்லை. என்னோடு நடித்த கதாநாயகர்களே காரணம் என்பேன். தமிழ், தெலுங்கு படங்களில் பிரபலமான கதாநாயகர் களோடு நடிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. "அந்தப் படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் ரசிகர்களை எளிதாக சென்றடைந்தேன். என்னை வைத்து படம் எடுத்த இயக்குநர்களும் என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்கிறார்கள். தொடர்ந்து எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்து சிறந்த நடிகை என்ற பெயரைத் தக்கவைக்கப் போராடுகிறேன். எனது கவனம் முழுவதும் சினிமாவில்தான் உள்ளது. வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை," என்றார் சமந்தா.