ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கிட்டத்தட்ட 60 முதியவர்களிடையே கொவிட்-19 பதிவாகிறது. இவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை ஆறு என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் கூறினார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரை, குறிப்பாக மூத்தோரைத் தொடர்ந்து கொவிட்-19 பலவாறு தாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மீண்டும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்று கூறப்பட்டது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி 32 பேருக்கு மறுபடியும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்று டாக்டர் ஜனில் தமது அமைச்சர்நிலை அறிக்கையில் குறிப்பிட்டார்.
கடந்த ஆறு மாதங்களில் கிருமித்தொற்றால் உயிரிழந்தோரில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினருக்கு 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாகும். உயிரிழந்தவர்களில் 72 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்த மீதம் 28 விழுக்காட்டினருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய், இருதய, நுரையீரல், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் போன்ற மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
"தடுப்பூசி போட்டுக்கொள்ளாததில் அபாயங்கள் அதிகம். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒருவருக்கு உயிர்வாயு தேவைப்படும் நிலை ஆறு மடங்கு அதிகரிக்கக்கூடும். கடுமையாக நோய்வாய்ப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் சாத்தியம் எட்டு மடங்கு அதிகரிக்கலாம். இறக்கும் வாய்ப்பும் 17 மடங்கு கூடுதலாகலாம்," என்றார் டாக்டர் ஜனில்.
கடும் நோய் பாதிப்பைக் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி குறைக்க உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த வார எண்ணிக்கைபடி இன்னமும் 68,000 முதியவர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லை.
கொவிட்-19 தடுப்பூசிகளை
கட்டாயமாக்குவதில் சிக்கல்
இதற்கிடையே, சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் நடைமுறை, கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று என்று டாக்டர் ஜனில் நேற்று கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்கினாலும் அதை நடைமுறைப்படுத்துவது சிரமம் என்றார் அவர்.
தடுப்பூசிகளைக் கட்டாயமாக்குவதில் தடுப்பூசி விகிதம், அனைத்துலக நடைமுறை, தடுப்பூசியின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொள்ளலாம் என்று அவர் விவரித்தார்.
இருப்பினும், தடுப்பூசியைக் கட்டாயமாக்கினால் அதைக் கண்காணிப்பதும் செயல்படுத்துவதும் சவாலாக இருக்கும் என்று டாக்டர் ஜனில் கூறினார்.
"அது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று என நான் நினைக்கிறேன். எனினும், அதன் தொடர்பில் பல சிக்கல்கள் உள்ளன," என்றார் அவர்.
கொவிட்-19 ஐசியு படுக்கைகளில் 60% நிரப்பப்பட்டுள்ளன
கொவிட்-19 நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 219 தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகளில், ஏறத்தாழ 60% படுக்கைகள் நிரப்பப்பட்டுள்ளதாக டாக்டர் ஜனில் தெரிவித்தார். நேற்றைய நிலவரப்படி கடும் பாதிப்புடன் ஐசியுவில் சேர்க்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 130 என்று கூறினார்.
சுவாசிப்பதற்குச் சிலருக்கு இயந்திரம் வழி உயிர்வாயு தேவைப்படுகிறது; ஐசியு குழுவின் தொடர் கவனிப்பு அனைவருக்கும் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஐசியுவில் நோயாளிகள் சராசரியாக 11 முதல் 15 நாட்கள் தங்க நேரிடுகிறது. ஒரு சிலர் ஒரு மாதம் வரை தங்கவும் செய்கின்றனர்.
கொவிட்-19 அல்லாத ஐசியு படுக்கை எண்ணிக்கையைக் குறைப்பதால் கொவிட்-19 நோயாளிகளுக்கான ஐசியு படுக்கைகளை அதிகரிக்க முடிவதாகவும் திரு ஜனில் குறிப்பிட்டார்.